இனி பேச்சு இல்ல வீச்சு.. ஹவுஸ் ஓனர்களே எச்சரிக்கை! மீறினால் 2 ஆண்டு ஜெயில் - ஆக்சனில் தமிழ்நாடு அரசு
சென்னை: தவறு என்றே தெரியாமல் தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் செய்து வரும் குற்றம் ஒன்றை கலைய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, தற்போது விதிகளை மீறும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டத்தின் எந்தவொரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.
அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுமக்களிடையே விழப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு நாளிதழ்களில் தமிழ்நாடு முழுவதும் விளம்பரங்களை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மொத்தம் 770 இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகள் 2022-ன்படி சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கழிவு நீரகற்றும் சேவைகளைப் பெறுவதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் செயலி (App) உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் நவீன பகுதி தானியங்கி கழிவுநீர் தடை அகற்றி இயந்திரம் (Sewer Croc) மூலம் கழிவுநீர் பிரதான குழாய்களில், கழிவுநீர் செல்ல தடையாக இருக்கும் கசடுகள். மரவேர்கள் மற்றும் கழிவு அடைப்புகளை நவீன முறையில் நீக்குவதற்கு 8 எண்ணிக்கையிலான நவீன பகுதி தானியங்கி கழிவுநீர் தடை அகற்றும் இயந்திரம் தற்பொழுது கொள்முதல் செய்வதற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின்றி விதிகளை மீறி கழிவு நீரகற்றும் பணிகளில் தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தும் உரிமையாளர் / ஒப்பந்ததாரர் / பணி அமர்த்துபவர் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீர் அமைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளை முற்றிலுமாக இயந்திரங்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications