நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: நவம்பர் 1ஆம் தேதி அன்று உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்குபெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;
22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் எண்.110 ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இதுவரையில் வருடத்திற்கு 4 முறை கிராமசபைகள் முறையே சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஐனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) நடத்தப்பட்டு வந்தன. தற்போது முதல்வர் ஆணைப்படி வருடத்திற்கு 6 முறை நடத்தப்படும். அதாவது கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய தினங்களில் நடைபெறும்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது
கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் 'நம்ம கிராம சபை' என்கிற கணிணி/தொலைபேசி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications