சிறந்த பத்திரிகையாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல் விருது- பேராசிரியர் அருணன் தலைமையில் தேர்வு குழு!
சென்னை: சிறந்த பத்திரிகையாளர்களுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வு குழு பேராசிரியர் அருணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டசபை கூட்டத் தொடரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்பு நிலை மக்கள் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கான தகுதிகள், வரையறை வகுத்தும் ஒவ்வோர் ஆண்டும் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3-ல் இவ்விருது வழங்கப்படும். விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ5 லட்சம் உடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதாளரை தேர்வு செய்ய பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது. குழுவின் தலைவர் பேராசிரியர் அருணன்; உறுப்பினர் செயலாளர் - கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு), உறுப்பினர்கள்: மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷியாம், முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் அரங்க மல்லிகா. இக்குழுவின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வுக் குழு மாற்றி அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications