வெறும் ரூ.1000 மட்டுமே கட்டணம்.. கிரைய பத்திரம் அப்படியே மாறும்.. பத்திரப்பதிவில் சூப்பர் நடைமுறை
சென்னை: பத்திரப்பதிவில் முன்பு இருந்த நடைமுறை அடியோடு மாறி உள்ளது.. 1000 ரூபாய் செலுத்தி பதிவு செய்த கிரைய பத்திரத்தை ரத்து செய்தால், சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் சொத்து சென்று விடும். இந்த புதிய நடைமுறையால் சொத்து வாங்குவோர் விற்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஒரு இடம் அல்லது வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தோட்டம் அல்லது வணிக வளாகம் என எந்த வகையான சொத்துக்களை நீங்கள் வாங்கினாலும், அதனை சொத்து அமைந்துள்ள பகுதியின் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று கிரைய பத்திரமாக பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அப்படி ஒரு நிலம்-வீடு என எந்த சொத்து வாங்கினாலும், அந்த பதிவுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் அளவிற்கு கட்டணத்தை தமிழக அரசு வசூலிக்கிறது.

பத்திரத்தை கிரையம் முடித்தவர்கள், மீண்டும் அந்த கிரையத்தை ரத்து செய்யவும் சட்டத்தில் இடமிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக பத்திரத்தை ரத்து செய்ய விரும்பினால், இருதரப்பும் சேர்ந்து இந்த ரத்து ஆவணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு ரூ.50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கிரையப் பத்திரத்தை ரத்து செய்வதால், 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது’ என்று ஒரு முத்திரை குத்தப்படுவது வழக்கம். அதாவது இந்த ரத்து ஆவணம் மூலமும் புதிதாக சொத்து வாங்கியவர்கள் பெயரிலேயேதான் அந்த சொத்து இருக்கும். இதனால் கிரைய ரத்து செய்வதால் எந்த பலனும் இல்லாமல் இருந்து வந்தது.
அதனால் பெரும்பாலானோர் கிரைய ரத்து ஆவணம் செய்வதற்கு பதில் மீண்டும் புதிதாக ஒரு கிரைய ஆவணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.. அதாவது மீண்டும் அவர்கள் 9 சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தி தங்கள் பெயருக்கு பத்திரத்தை மீண்டும் கிரயம் செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒருவர் 30 லட்சம் சொத்து வாங்குகிறார் என்றால் 2.70 லட்சம் பணத்தை முதல் கிரயத்திற்கும், மீண்டும் அதே அளவு பணத்தை இரண்டாவது கிரயத்திற்கு செலவு செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. கிட்டத்தட்ட ஒரே சொத்தால் சுமார்..5.5 லட்சம் அளவிற்கு வரி கட்ட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் கிரைய ரத்து ஆவணத்தில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரகூடிய அறிவிப்பினை தமிழக பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது.இனி மேல் கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் அதற்கு ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். அந்த பத்திரத்தில் முன்பு இருந்த நடைமுறையான 'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது’ என்ற முத்தி்ரை இனி குத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கு மீண்டும் சொத்து சென்று விடும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக தமிழக பத்திரப்பதிவு துறை தனது அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications