சென்னை, கோவை, மதுரைக்கு வரும் சூப்பர் பஸ்கள்.. 500 மின்சார சொகுசு பேருந்துகள் வாங்க டெண்டர்!
சென்னை: புதிதாக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தற்போது கோவை, மதுரை நகரங்களிலும் மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என்று இரு வகையாக பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. ஏற்கனவே சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
500 தாழ்தள மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான டெண்டர் விண்ணப்பத்தை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை டெண்டர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2022-23 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.154 கோடி ஒதுக்கப்பட்டு, 910 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

தொடர்ந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 888 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 112 பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதேபோல 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76.34 கோடி ஒதுக்கப்பட்டு 154 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.












Click it and Unblock the Notifications