8-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை.. நர்சரி பள்ளிகளும் இயங்காது.. அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தவிர ஓமிக்ரான் தொற்றினாலும் தமிழகத்தில் 120 பேர் பாதிப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப் பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்,

8- வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை
என்னென்ன கட்டுப்பாடுளை கொண்டு வரலாம் என்று மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படியே தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். இதில் ஒன்றுதான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 10-ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்பதாகும்.

10-ம் தேதி வரை..
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஆதிக்கம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடந்த பள்ளிகள் சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டன. முதலில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகுதான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வந்தன. தற்போது கொரோனா அதிகரித்துள்ள நிலையில்தான் 8 வரையிலான வகுப்புகளுக்கு 10-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

நர்சரி பள்ளிகள் இயங்காது
இதேபோல் மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிவகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்
சென்னை மக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயில்களில் 50% பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆனால் பேருந்துகளில் இருக்கைக்கு மிகாமல் பயணிகள் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications