ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.. மத்திய அரசு
சென்னை: ஆன்லைன் விளையாட்டை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்த சட்டம் செல்லுபடியாக கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதி, சுகாதாரம் மற்றும் சூதாட்டம் தொடர்பாக மட்டுமே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லா இளைஞர்கள் தின கூலிகள் ஆட்டோ டிரைவர்கள் ஒரு போலீஸ் என 32 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இந்த சட்டம் அவசியமாகிறது என்றும் அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் சட்டப்படி, ஆன்லைன் விளையாட்டுக்களின் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும்.
ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வாதம் வைத்தார். இதனையடுத்து தமிழக அரசின் பதில் வாதத்திற்காக, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். முன்னதாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-
தமிழக அரசு சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தும் மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முடியாது. பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாட அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாக கூறுவதற்கு எந்த புள்ளி விவரமும் இல்லை.
திறமை விளையாட்டான ரம்மியை ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளையும், சுய கட்டுப்பாடுகளையும் பின்பற்றுகின்றன" என்று வாதிட்டனர். ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications