இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை.. மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை கட்டுப்படுத்துங்கள்.. ஐகோர்ட்
சென்னை: ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையின்றி வெளியில் வருபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனத் தமிழ்நாடு அரசிற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக இருந்தது. இதனால் கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னரே கொரோனா பரவல் மாநிலத்தில் குறைந்தது. இதையடுத்து தற்போது மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
விலக்குகளுக்கு உணவு
இந்நிலையில், கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நாய்களுக்கு 2500 கிலோ வழங்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 104 குதிரைகளுக்கு 3536 கிலோ கோதுமை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ரேபிஸ் தடுப்பூசி
விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும், அதில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியை அறிவியல்பூர்வமாகவும் மனிதாபிமான முறையிலும் செலுத்துவதற்கான அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் நீதிபதிகள் கூறுகையில், ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளைப் பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போலப் பொதுமக்கள் நடந்து கொள்வதாகத் தெரிவதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனவும் தெரிவித்தனர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
ஊரடங்கு நீக்கப்படவில்லை
இதனால் பொதுமக்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என தற்போது காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்குக் காரணமாக இருக்கலாம் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமெனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைக் குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையிலும், வெளியில் சுற்றித்தியக்கூடாது எனவும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர்.