6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்! வடக்கு மண்டல ஐ.ஜி.யாக கண்ணன் ஐ.பி.எஸ்.நியமனம்!
சென்னை: தமிழக காவல்துறையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை திடீர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி.
ஆயுதப்படை பிரிவு ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் ஐ.பி.எஸ். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த தேன்மொழி ஐ.பி.எஸ். சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல் சென்னை பரங்கிமலை காவல் துணை ஆணையராக இருந்த பிரதீப் ஐ.பி.எஸ். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் சிறப்பு படை பட்டாலியன் எஸ்.பி.க்களாக இருந்த தீபக் சிவாச் பரங்கிமலை காவல் துணை ஆணையராகவும், சமாய் சிங் மீனா சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தீபக் சிவாச் வகித்த தமிழ்நாடு காவல் சிறப்பு படை ஆவடி பட்டாலியன் எஸ்.பி பணியிடத்துக்கு குமார் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட இந்த மாற்றத்தை பொறுத்த வரை கண்ணன் ஐ.பி.எஸ். மாற்றம் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வடக்கு மண்டல ஐ.ஜி. மாற்றப்பட்டிருப்பதன் பின்னணியில் உளவுத்துறை அறிக்கையும் முக்கிய பங்கு வகிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேற்கு மற்றும் தென் மண்டலத்திலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் இருக்கக் கூடும் என கூறப்பட்ட நிலையில் அது போல் எதுவும் நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications