கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு எடுத்த மேஜர் முடிவு.. ரேஷன் கடைகளில் நடக்கும் மாற்றத்தை கவனித்தீர்களா?
சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு எழுதிய கடிதத்தில், கூட்டுறவு வங்கிகளில் ரேஷன் கடை ஊழியர்களை பயன்படுத்தி கூடுதல் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்பட பல்வேறு பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை அதிகரிக்க ரேஷன் கடைகளை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை தரவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்தியகால வேளாண் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் 18.36 லட்சம் விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கியினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமையப்பெற வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும், பல்வேறு அரசின் கடன் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளவும், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்தான கையேடுகள் வினியோகிக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களை கொண்டு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். விண்ணப்பங்களை 'கே.ஒய்.சி.' விவரங்களுடன் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்து பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் தொடங்கப்படும் ஒரு சேமிப்பு கணக்குக்கு, ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5 வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ரேஷன் கடைகள் மூலம் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள் மற்றும் நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்தான கையேடுகள் மின்னணு பரிவர்த்தனை, ஏ.டி.எம். கார்டு வசதி போன்றவை எளிதில் பெறும் வகையில் இந்த வசதிகள் அடங்கிய தொகுப்பை (அக்கவுண்ட் ஓப்பனிங் கிட்) அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு கணக்குகள் குறித்தான முன்னேற்றத்தினை கண்காணித்து திறனாய்வு கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
மண்டல இணைப்பதிவாளர்கள் இதுகுறித்து ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு, பண்டகசாலைகளுக்கு துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) மூலம் தக்க அறிவுரை வழங்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்கிடவும், இதன் மீதான நடவடிக்கைகளை கண்காணித்திடவும் வேண்டும்" இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications