கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்... உடனடி நடவடிக்கை தேவை.. கமல் வலியுறுத்தல்
சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்,
கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் வைரசின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது. உயிரிழப்புகளும் மிக அதிகமாகவே உள்ளது.

கமல் அறிக்கை
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறையக் குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

மற்ற மாநிலங்கள்
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புது டெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கிக்கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாகச் செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகையின் மூலமாகக் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்தக் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது,

உறவினர்களிடம் வளர வேண்டும்
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோரில் நெருங்கிய நட்பு வட்டத்தினர் பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவர்கள் தத்தெடுத்தால் குழந்தைகள் மனரீதியிலாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

உறவினர் பராமரிப்பு திட்டம்
எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாநில துறைகளும் சிறார் நீதி சட்டம் அடிப்படையில் பெற்றோரை இழந்தவர்களைப் பராமரிக்க "உறவினர் பராமரிப்பு திட்டத்தை (Kinship care) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகச் செயல்படுத்த வேண்டும்.

உரிய நடவடிக்கை
மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சார்பில் இந்த நெருக்கடியான காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அவர்களைப் பராமரிக்கவும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தரத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்" என்று கமல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications