இல்லம் தேடி கல்வியைத் தொடர்ந்து வீடு தேடி கொரோனா தடுப்பூசி திட்டம்... இன்று முதல் தொடக்கம்!
சென்னை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி பாணியில் இன்று முதல் வீடு தேடி கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நீண்ட காலத்துக்குப் பின்னர் 1000க்கும் கீழ் என குறைந்துள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இன்று முதல் தமிழகத்தில் வீடு தேடி கொரோனா தடுப்பூசி போட்டம் தொடங்கப்பட உள்ளது.

18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி?
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. மத்திய அரசு அனுமதி வழங்கியதும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.

வீடு தேடி கொரோனா தடுப்பூசி
வார நாட்களில் ஒருநாளைக்கு சராசரியாக 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது வார நாட்களில் கொரோனா தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 12, 525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70- 80 கிராமங்களுக்கும் டாக்டர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
Recommended Video

கட்டுப்பாடுகளில் தளர்வு இல்லை
வீடு தேடி கொரோனா தடுப்பூசி போடும் இந்த திட்டத்தை செவ்வாய்க்கிழமையன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறேன். கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. ஆகையால் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தற்போது தளர்த்த வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 400 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகையால் டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

இல்லம் தேடி கல்வி போல..
தமிழகத்தில் ஏற்கனவே இல்லம் தேடி கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனை புதுப்பிக்கும் வகையில் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுதான் இல்லம் தேடி கல்வித் திட்டம். இதே பாணியில் இப்போது வீடுதேடி கொரோனா தடுப்பூசி போட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications