மீண்டும் ‘3 லேயர் மாஸ்க்’ கட்டாயம்.. வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்.. சுகாதாரத்துறை வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா என பருவகாலத்தில் பரவும் தொற்று நோய்களின் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதால், மாஸ்க் அணிவது அவசியம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் இந்த மாதம் 10ஆம் தேதி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த இரண்டு நபர்களின் மருத்துவ பரிசோதனை வெளியானதில் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளா தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் என்பதால் நிபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் ஏற்படாமல் இருக்க எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழக - கேரள எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என உடல் நல பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அதேபோல, 'ப்ளூ' வைரஸ்களால் பரவும், 'இன்ப்ளூயன்சா' காய்ச்சலும் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியவை.
இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் செய்யாமல், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்க வேண்டும். நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது அவசியம். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம். சில நாட்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
மருத்துவத் துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொறுத்து நோயாளிகளை வகைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் வைரஸ்கள் பரவும் காலகட்டத்தில், தேவைப்படும்போது மாஸ்க் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் மாஸ்க் அணிவதை பலரும் வித்தியாசமாக பார்த்த காலம் இருந்தது. ஆனால், கொரோனா தொற்றுக்குப் பிறகு கிட்டத்தட்ட அனைத்து மக்களுமே மாஸ்க் அணியத் தொடங்கிவிட்டனர். இப்போது பருவமழைக் காலத்தில் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்க மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications