நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: போட்டியிட யார் தகுதியான வேட்பாளர் - இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. மாட்டுவண்டியில் வந்தும், குதிரையில் வந்தும் எலிப்பொறியில் பணத்தை வைத்துக்கொண்டு வந்தும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பலமுனைப்போட்டி
இந்த தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும், தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன்காரணமாக தேர்தல் அலுவலகங்கள் களை கட்டின. நேற்று ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டதால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டன.

டோக்கன் முறை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலை 5மணியுடன் நிறைவடைந்தது. திமுக, அதிமுக, விசிக, பாஜக என பிரதான கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். டோக்கன்கள் கொடுக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 21 வயது இளம் வேட்பாளர்கள் முதல் 90 வயதிற்கு மேற்பட்ட வயதான வேட்பாளர்கள் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்
கடைசி நாளான நேற்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நாளை மறுநாள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.

வாக்குப்பதிவு
பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications