நம்ம கோவை ஸ்மார்ட்டு தானுங்க-நாம எல்லோருமே கெத்து தானுங்க- எஸ்.பி. வேலுமணியின் பிரசார பாடல் வெளியீடு
சென்னை: 'நம்ம கோவை ஸ்மார்ட்டு தானுங்க, நாம எல்லோருமே கெத்து தானுங்க' என உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை பாராட்டும் தேர்தல் பிரசார பாடல் இன்று வெளியிடப்பட்டது.
அதிமுகவின் அமைப்பு செயலாளரும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அதிமுக தேர்தல் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறையின் அனைத்து திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
இதேபோல்,கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு மருத்துவமனையில் உயர்தர நவீன சிகிச்சை வசதிகள், மேம்பாலங்கள் , புதிய குடிநீர் திட்டங்கள், புதிய சாலை வசதிகள், அம்மா மினி கிளினிக், புதிய ரேஷன் கடைகள், புதிய சமுதாய நலக்கூடங்கள் ,அனைத்து தரப்பினருக்கும் அடிப்படை வசதிகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொண்டு வந்துள்ளார். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார்.
கோவை மாவட்ட மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கான களப்பணியில் களைப்பின்றி களமாடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சேவைகளை பாராட்டி, அவரை கோவையின் சேவை நாயகன் என்று கோவை மக்கள் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி ஏற்கனவே களப்பணிகளை தீவிரப்படுத்திய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தற்போது கோவை மாவட்ட தேர்தல் விளம்பர பிரச்சாரத்தையும் தொடங்கி இருக்கிறார். தன்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதி மற்றும் கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்ட உதவிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி சமூக ஊடகங்கள் வழியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
கோவையின் சேவை நாயகன் வேலுமணி அண்ணா என்ற முழக்கத்துடன். 'நம்ம கோவை ஸ்மார்ட்டு தானுங்க, நாம எல்லோருமே கெத்து தானுங்க' என்று கோவையில் வளர்ச்சி குறித்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சாதனைகள் குறித்தும் பிரச்சார பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் முன்னணி செய்தி தொலைக்காட்சிகள், பண்பலை வானொலி, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலதளங்களில் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய டிஜிட்டல் முறையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேற்கொண்டுள்ள இந்த பிரச்சாரம் தேர்தல் களத்தில் தனி கவனத்தை பெற்றுள்ளது.