தமிழ்நாட்டுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை..நிர்மலா சீதாராமன் முகத்துக்கு நேரே தங்கம் தென்னரசு விளாசல்!
சென்னை: உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக சாடினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான தேவையான ரயில்வே, சாலைத் திட்டங்களைப் பட்டியலிட்டு பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
டெல்லியில் மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

பெரிய அளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிறது. அடுத்தடுத்து வந்த மத்திய வரவு-செலவு திட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான இரயில்வே திட்டங்களே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அப்பகுதிகளில் இரயில்வே உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொழிற் பகுதிகளில் புதிய இரயில்வே தடங்கள் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் வரவு-செலவு திட்டத்தில் தமிழ்நாட்டில் பின்வரும் இரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:
5 புதிய ரயில் திட்டங்கள்:
1). தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு இடையே 4-ஆவது இருப்புப்பாதை வழித்தடம்.
2). திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடம்.
3). அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி (143.5 கி.மீ.)
4). மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் - மதுராந்தகம் - சிங்கப்பெருமாள்கோயில்
5). சேலம் - ஓசூர் - பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் - எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை - சேலம் - கோயம்புத்தூர் ஆகிய இடங்களை இணைக்கும் மித அதிவேக இரயில் வழித்தடம். (Semi-High Speed Railway Corridor).
தாம்பரம்- திண்டிவனம் உயர்மட்ட சாலை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையேயான திட்டங்களை அதிக அளவில் அத்தகைய திட்டங்களில் ஒன்று தாம்பரம் (NH-32) உயர்மட்ட சாலை மற்றும் செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரையிலான உயர்மட்ட சாலை அமைப்பதாகும், இது முன்னுரிமையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
சென்னை- கன்னியாகுமரி வழித்தடம்: 2005-ஆம் ஆண்டில் சென்னை - கன்னியாகுமரி வழித்தடத் திட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நான்கு வழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது போக்குவரத்து வாகனங்கள் பன்மடங்கு அதிகரித்து, சாலை விபத்துகளால் கடுமையாக பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தை விரிவாக்கும் புதிய திட்டத்திற்கு மத்திய அரசு வரும் வரவு செலவு திட்டத்தில் போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.












Click it and Unblock the Notifications