விடாமல் உளரும் அதிமுக தலைகள்.. அடுத்தடுத்த லெவலுக்கு மாறி அசத்தல்!
Recommended Video
சென்னை: அதிமுக அமைச்சர்கள் எப்பவும் இப்படித்தானா அல்லது இப்படித்தான் எப்பவுமா என்ற கேள்வி எழுகின்ற வகையில் அவர்களின் உளறல்களும் சர்ச்சை பேச்சுகளும் உச்சத்தில் சென்று கொண்டிருக்கின்றன. இந்த உளறல்களிலும் சர்ச்சைகளிலும் முதல் பரிசை பெறுகின்ற முனைப்பில் அமைச்சர் செல்லூர் ராஜுவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அமைச்சர் பெருமக்கள்தான் இப்படி என்றால் இந்தப் போட்டியில் முதலமைச்சரும் உள்ளார் என்பதுதான் தமிழக மக்களின் பெருமை. இப்படி தொடர்ச்சியாக நீண்டுகொண்டிருக்கும் இந்த உளறல் மற்றும் சர்ச்சை போட்டியில் மீண்டும் புதிய சகாப்தம் படைத்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது அதிமுக அரசு என்று கூறியவர் ஒரு படி மேலே சென்று இன்று அவர்கள் 7 பெரும் உயிரோடு இருப்பதே அம்மா போட்ட பிச்சை என்று கூறியிருக்கிறார். இது இவரது உளறலின் உச்சகட்டமாகவும் சர்ச்சையின் உச்சமாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்!
இது கட்டாயம்
இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் உளறல்கள் மற்றும் சர்ச்சை பேச்சுகளை சற்று திரும்பி பார்ப்பது காலத்தின் கட்டாயம். அதிலும் முதலிடத்திற்கு கடும் போட்டியை கொடுத்து கொண்டிருக்கும் செல்லூர் ராஜு வைகை நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் கொண்டு அணையைக் கொண்டு மூட முயற்சிக்க அது உலக அளவில் டிரென்ட் ஆனது,
வச்சு செய்த மீம்ஸ் கிரியேட்டர்கள்
மீம்ஸ் கிரியேட்டர்களும் வலைதள வாசிகளும் தங்களுக்கு ஒரு ஹீரோ கிடைத்து விட்டார் என்று அவரை வெச்சு செஞ்ச விதம் வேற லெவல். இப்படி என்ட்ரி கொடுத்தவர் அடுத்ததாக, அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை இருந்தால்தான், அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் பெற முடியும்' என்று அதிரி புதிரியாக அடுத்த அஸ்திரத்தை ஏவினார்.
கடும் போட்டி
இவர் இப்படி என்றால் இவருக்கு பெரும் டஃப் ஃபைட் கொடுப்பவர் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன். டி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, பெற்றுக்கொண்டு, தற்போது தினகரனுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்' என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்து ஒரே நாளில் அகில உலக ஃபேமஸ் ஆனது வேறுகதை.
அடடா அடடா
முன்னதாக மாண்புமிகு பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் என்று மோடிக்கு மன்மோகன்சிங் என்ற பெயரை சூட்டி மகிழ்வு கொண்டாரா அல்லது மன்மோகன்சிங் முன்னாள் பிரதமர் என்பது கூட தெரியாமல் ஒரு பொது மேடையில் பேசினாரா என்பது அவருக்குள் இருக்கும் ஆழ்மன சக்திக்கே வெளிச்சம். இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல மன்னித்து விடுங்கள் மக்களே அம்மா இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்க என்று நாங்க சொல்வதெல்லாம் (சாரி வாசகர்களே ஒரு புளோல சொல்வதெல்லாம் -னு வந்திருச்சு) நாங்க சொன்னதெல்லாம் பொய் என்று போட்ட போடில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் முதல் மெரீனா கடற்கரை வரை ஆடி அடங்கியது.
ஆஹா அமைச்சர்
இவர்களின் கதை இப்படி என்றால் டாக்டர் விஜயபாஸ்கர் இந்திராகாந்தியை முதல்வராக்கி பெருமிதம் கொண்டார். காவிரி நீர் பிரச்சனை இந்திரா காந்தி முதல்வராக இருந்தபோதும் இந்த பிரச்சனை தீவிரமாக இருந்தது என்று வரலாற்றையே திரும்பி பார்க்க வைத்தார். அடுத்த பெருமைக்குரியவர் அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணத்தில் பேசும்போது காவிரி நீர் என்ன எனது பாக்கேட்டிலா இருக்கிறது என்று கேட்டு தஞ்சை மாவட்டத்தை மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர வைத்தார். அதோடு நிற்காமல் எனது வீட்டு குழாயை திறந்தாள் காவிரி நீர் வந்து விடுமா என்றெல்லாம் கேட்டு அசத்தினார் அந்த வேளாண்துறை அமைச்சர்.
தைரியமூட்டிய ரா பா
அடுத்த அதிரடிக்கு சொந்தக்காரர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் எடப்பாடி குருவின் நேரடிப் பார்வையில் உள்ளார். ஆகவே அவரது அரசை அசைக்கக்கூட முடியாது என்று அசரீரி பொழிந்தார். அரசு கலைந்து விடும் என்று தொண்டர்கள் அச்சப்பட்டு விடக்கூடாது என்றெண்ணிய அமைச்சர் மீண்டும் "நாம யாருக்கும் பயப்படத் தேவையில்ல யார் வந்தாலும் சரி ஏன் ஒபாமாவே வந்தாலும் சரி ட்ரம்ப்பே வந்தாலும் சரி நமக்கு மோடி இருக்கிறார் என்று ஒரு அசரீரி பொழிந்து தொண்டர்களை காத்தருளினார்.
இது ரொம்ப புதுசு
இதேபோல ஒரு விழாவில், பேசிய கல்வியமைச்சர் செங்கோட்டையன் நடிகை சுகாசினி மணிரத்தினத்தை சுகாசினி மணிவாசகம் அவர்களே என்றும், சுதா ரகுநாதனை சுதா ரகுராமன் என்றும் அழைத்து தானும் இந்த அமைச்சரவையில் ஒரு அங்கம்தான் என்று காண்பித்துக் கொண்டார். அதற்கு முன்னதாக சசிகலாவை ஆதரித்தது தொடர்பாக ஆங்கில ஊடக நிருபரின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தவர் எனிபடி ஏ.டி,எம்,கே பீப்பிள் சபோர்டிங் மேடம் என்று ஷேக்ஸ்பியருக்கே சவால் விடுத்தார்.
ஜெ. அமைதியாக வைத்தது இதற்குத்தானா
இவர்களே இப்படி என்றால் இவர்களுக்கு தலைமைஏற்று வழி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த ஜோதியில் தன்னை ஐக்கியமாக்கி கொண்டு எம் ஜி ஆர் விழா மேடையில் கம்பராமாயணம் தந்த சேக்கிழார் பிறந்த பூமி என்று பெரும் பூமியதிர்ச்சியை ஏற்படுத்திய பெருமை அவருக்கே உரித்தானது. இப்படியாக பொன்மொழிகளும் சர்ச்சைகளும் வரும் என்று தெரிந்துதானோ என்னவோ ஜெயலலிதா இவர்களை பேசவே விடாமல் வைத்திருந்தாரோ.