அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால போராட்டம் நிறைவேறியது.. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.. ஜாக்டோ ஜியோ!
சென்னை: 23 ஆண்டு காலமாக ஓய்வூதியமின்றி இருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 23 ஆண்டு கால போராட்டம் நிறைவேறியதாக கூறிய ஜாக்டோ ஜியோ அமைப்பு, தாங்கள் எதிர்பார்த்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றன. ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் ஜாக்டோ, போட்டா ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்புகளை அழைத்து டிசம்பர் 22ஆம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி கால வரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டன.
இதனிடையே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு, தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை அளித்தது. இதையடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களை பேச்சுவார்த்தைக்காக அமைச்சர்கள் குழு மீண்டும் அழைத்து பேசியது. இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய திட்டம் மூலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு 50 சதவிகிதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி ரூ.13 ஆயிரம் கோடி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50 சதவிகிதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அதேபோல் அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
அதேபோல் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டா ஜியோ அமைப்புகள் வரவேற்றுள்ளதோடு, போராட்டத்தையும் ஒத்தி வைத்துள்ளனர்.
அதேபோல் 23 ஆண்டு காலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாகவும், இந்த அறிவிப்பை ஜாக்டோ ஜியோ பெருமகிழ்வோடு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications