இதுவரை 1.01 கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்துள்ளது..ஹைகோர்டில் தமிழக அரசு தகவல்
சென்னை: தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து 1.01 கோடி டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 96.74 லட்சம் பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்வரை தற்போதுள்ள நடவடிக்கை தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தமிழகத்திற்கு ஜூன் 5 ஆம் தேதி வரை 1,01,63,960 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் 45 வயதுக்கும் மேற்பட்ட 79,92,373 பேர் உட்பட மொத்தம் 96,74,470 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 18-44 வயது வரை உள்ள 16,82,097 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜூன் 9 முதல் ஜூலை 2 வரை 37,13,190 டோஸ்களை வழங்குவதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறும் போது, இரண்டாவது அலை பரவ தொடங்கிய நாட்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாவிட்டாலும், பின்னாட்களில் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளே தற்போது கட்டுக்குள் வருவதற்கு முக்கிய காரணம். கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை ஒதுக்கும் பணி தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இது தொடர வேண்டும். இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பல நாடுகள் விலக்கி வரும் நிலையில், கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், சிறுபயணமாக இந்தியா வந்து திரும்புபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications