சொல்லி அடித்த தமிழக அரசு.. ஒரேநாளில் 5.5 லட்சம் கோடி! உலக முதலீட்டாளர் மாநாட்டில் இலக்கை எட்டி சாதனை
சென்னை: வரும் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ. 5.5 லட்சம் கோடி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதலீட்டாளர்களை அதிகம் கவரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. இதனால், தமிழ்நாட்டின் ஜிடிபி இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தவும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக்வே முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உலக முதலீட்டாளர் மாநாடு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உலக முதலீட்டாளர் மாநாடு: இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இதில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முதலீட்டாளர்களை வரவேற்று பேசினார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஜப்பான், என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ரூ. 5.5 லட்சம் கோடி: அதேபோல், இந்தியாவின் முன்னாணி தொழில் நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளிலேயே ரூ. 5.5 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் புரிந்துணர்வு ஒப்பதங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. டாடா பவர் நிறுவனம் தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் குழுமம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு என இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.
ஒரு டிரில்லியன் டாலர்: இதனால், முதல் நாளிலேயே ரூ. 5.5 லட்சம் கோடி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளதாக தொழில் துறை செயலாளர் அருண் ராய்ட் தெரிவித்துள்ளார். 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதற்கு இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான தமிழ்நாட்டின் பார்வை என்ற ஆய்வறிக்கையும் வெளியிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications