19 மாதங்களுக்குப் பின் தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு- மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
சென்னை: தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தரும் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
Recommended Video
கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைய குறைய லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் ஒருபகுதியாக செப்டம்பர் மாதத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இன்று முதல் பள்ளிகள் திறப்பு
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மொத்தம் 38 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

என்ன வழிகாட்டு நெறிமுறைகள்?
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும்; மாணவர்களுக்கு பள்ளி நுழைவு வாயிலில் உடலின் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.

கல்வி கற்றல் முறை
இன்று முதல் 15 நாட்களுக்கு மாணவர்களுக்கு கதை, பாடல், ஓவியம் என மனமகிழ்வு செயல்பாடுகளை முதல் கட்டமாக ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களும் அமராத வகையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அன்றைய தினம் வகுப்புகள் இல்லாத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டியது இல்லை; விரும்பியவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டம்
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையிலும் கொரோனா கால பாதிப்புகளில் இருந்து மீட்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது பள்ளி நேரத்துக்கு பின்னர் மாலை நேரங்களில் மாணவர்களின் வீடுகளின் அருகே தன்னார்வலர்கள் மூலமாக அவர்களின் கற்றல் செயல்பாடுகளை புதுப்பிக்கும் வகையிலான செயல்பாடுகளை இந்த தன்னார்வலர்கள் மேற்கொள்வர். இதற்காக இதுவரை சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஆன்லைனில் பதிவும் செய்துள்ளனர்.

வரவேற்பு ஏற்பாடுகள்
இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விருந்தினர்களைப் போல வரவேற்றனர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு சிறப்பான உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டன. மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் வாத்தியங்கள் இசைத்தும் வரவேற்புகள் அளிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications