காவி உடை திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்துவதா? கொந்தளித்த காங்கிரஸ்
சென்னை: தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வமான திருவள்ளுவர் படத்தைப் பயன்படுத்தாமல் காவி உடை திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட செய்தி அறிக்கையில், தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழினத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பான செல்வப்பெருந்தகை அறிக்கை: தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தினம், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இன்று (15.01.2025) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

ஆளுநர் மாளிகையில் நடந்த திருவள்ளுவர் தின விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார்.
அய்யன் திருவள்ளுவருக்கு சாதி, மொழி, மதம் என்பது கிடையாது. அவருக்கு காவி உடை அணிந்து, சித்தரிப்பது ஏற்க முடியாது. ஆளுநர் ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து வெளியிடுவது சட்டத்துக்கு புறம்பானது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படி செய்வது கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது.
தமிழ்நாடு அரசை மட்டுமல்ல, தமிழனத்தையும், திருவள்ளுவரையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆளுநர் ரவி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications