ஒழுக்கம் வேண்டும்.. கட்டுப்பாடு இருக்கணும்.. கராத்தே குறித்து அழகிரி கட் அண்ட் ரைட் பேச்சு!
சென்னை கட்சி நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு அவசியம், ஒழுக்கம் முக்கியம். அது இல்லாவிட்டால் அந்தக் கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
கராத்தே தியாகராஜனை கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டமைக்காக காங்கிரஸ் மேலிடம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அவரது வீட்டுக்குப் போய் தனது ஆதரவாளர்களோடு சந்தித்து இதுதொடர்பாக தனது மனக்குமுறலை வெளியிட்டார் கராத்தே தியாகராஜன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர் இப்படிப் பேசினார். இவர் அப்படிப் பேசினார்.. ஆனால் என்னை மட்டும் நீக்கியது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இதற்கு அழகிரி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி பேசுகையில், நாம் ஒரு கூட்டணியில் இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கை அடிப்படையில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
இந்தக் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் நாம் செயல்படக் கூடாது. குறிப்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும். கட்டுப்பாடு இருக்க வேண்டும். அது இல்லாத கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். நிராகரித்து விடுவார்கள்.
நாம் எதைப் பேசினாலும் அது முக்கியமா, தேவையா என்று யோசித்துப் பேசவேண்டும். குறிப்பாக இப்போது அதைப் பேசியாக வேண்டிய கட்டாயம் உள்ளதா என்று யோசித்துப் பேச வேண்டும் என்று பதிலளித்தார் அழகிரி.
தனது நீக்கத்தின் பின்னணியில் அழகிரி இருப்பதாக கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான் அழகிரி இப்படி பொளேர் பதிலை அளித்துள்ளார்.
தனது பேட்டியின்போது உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும். அக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.