ஆர்டிஓ அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. சாதாரண நபர்களால் லைசென்ஸ் பெற முடியாத அவலம் -காங்கிரஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சாதாரண மக்களால் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு போன்றவற்றைக் கூட பெற முடியாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கணக்கில் காட்டாத
விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து கணக்கில் வராத 117 சவரன் தங்க நகை மற்றும் 24 லட்சத்து 15 ஆயிரத்து 780 ரூபாய் பணமும், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடமிருந்து 1லட்சத்து 43 ஆயிரத்து 250 ரூபாய் பணமும் இடைத்தரகர் அதுல் பிரசாத்திடமிருந்து ரூ. 7,850 பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.30 லட்சம் பறிமுதல்
அதேபோன்று, .சென்னை,ஓசூர்,தேனி,ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர்,விழுப்புரம், கோவை உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகள் நடத்தியதில் மட்டும் கணக்கில் வராத மொத்தம் ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

போக்குவரத்துத் துறை
போக்குவரத்துத் துறை என்பது இன்று முற்றிலும் ஊழலால் புரையோடிவிட்டதையே இத்தகைய சோதனையும், மீட்கப்பட்ட பணமும், நகைகளும் பிரதிபலிக்கின்றன. போக்குவரத்துத் துறைக்கு சில தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜிபிஎஸ் கருவிகள் வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருப்பதாகவும், இதில் மெகா வசூல் நடப்பதாகவும் திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார்.

கீழ்நிலை ஊழியர்கள்
சோதனை செய்வதும், வழக்கு என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு அந்த சம்பவம் மறந்துபோவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஏதோ, போக்குவரத்துத்துறையில் கீழ்நிலை ஊழியர்கள் தான் இந்த முறைகேட்டில் ஈடுபடுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அளவிலிருந்து சமிக்ஞை வராமல் இத்தகைய முறைகேட்டில் யாரும் ஈடுபடச் சாத்தியமில்லை என்பதே உண்மை.

சிபிஐ விசாரணை
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணையோடு நிறுத்தாமல், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சிபிஐ விசாரணை கோருவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications