பாஜகவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி... மேகதாது அணையை தடுக்கவும்- கே.எஸ்.அழகிரி
சென்னை: பாஜகவுடனான நெருக்கத்தை பயன்படுத்தி கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானதாகும். கடந்த 1991 இல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு 2007-இல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த நீரைக் கூட உறுதியாக பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது.
வன்னிய சமுதாய மக்களுக்கு அரசு செய்த சாதனை என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி
உச்சநீதிமன்ற தீர்ப்பு
இரு மாநிலம் சம்மந்தப்பட்ட இத்தகைய நதிநீர் பங்கீடுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் நீரை பெறுகிற சமஉரிமை கோட்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதில் ஒரு மாநிலத்தை விட இன்னொரு மாநிலம் உயர்ந்தது என்றோ, அதிக உரிமை கொண்டது என்றோ கருதுவதற்கு வாய்ப்பில்லாத வகையில் தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகிற வகையில் நீண்டகாலமாக புதிய அணைகளை கட்டுவதும், நீர்ப்பாசன பரப்புகளை விரிவுபடுத்துவதுமே அதனுடைய செயல்பாடுகளாக இருக்கிறது. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
தீர்ப்பு மீறல்
கடந்த 2019 நவம்பர் 22-ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியையும் பெற்றிருக்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின்படி, காவிரி ஆற்றில் எத்தகைய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. அப்படி கூறப்பட்ட தீர்ப்புகளை மீறுகிற வகையில், தற்போது தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மேகதாதுவில் அணை கட்டுகிற பணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென கர்நாடக அரசு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியிருக்கிறது.
ஒரே நிலை
கடந்த ஜூன் 2018 இல் உச்சநீதிமன்ற ஆணையின்படி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவரும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும் ஒருவராகவே இருப்பதை எதிர்த்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், தொடர்ந்து அதே நிலை தான் நீடித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி பிரச்சினையில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கவனிப்பதில்லை. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணமாகும்.
தீர்வு தேவை
ஏற்கனவே, மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். ஏற்கனவே, தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு பறிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாத அவலநிலையில் இருக்கிறது. இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்காமல் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க, சமீபகாலமாக மிகமிக நெருக்கமான உறவு கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் மூலமாகவும், உச்சநீதிமன்றத்தை அணுகுவதன் மூலமாகவும் உரிய தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.