மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு.. மேலும் 26 பேர் கைது.. 40 பேருக்கு வலை
சென்னை: தமிழகத்தையே அதிர வைத்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 40 பேரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் 2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக ஒரு சில தேர்வு மையங்களை தேர்வு செய்து, பலர் முறைகேடாக பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.
இப்படி முறைகேடு செய்து சிலர் வெற்றிபெற்றது உண்மை தான் என டிஎன்பிஎஸ்சி அவர்கள் மீது புகார் அளித்தது. இந்த புகாரை ஏற்று சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.\
ஒபிஎஸ் எண்ணம் நிறைவேறாது.. தேனியில் பரபரப்பை கிளப்பிய தங்க தமிழ்ச் செல்வன்!
கிளார்க் ஓம்காந்தன் கைது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன். இடைத்தரகர்கள், பணம் கொடுத்து வென்றவர்கள் உட்பட 32 பேரை கடந்த பிப்ரவரி மாதம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
பலரும் வெற்றி பெற்றதாக தகவல்
டிஎன்பிஎஸ்சி வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தனிடம் பல முறை விசாரணை நடத்தினர். இதில் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி, ஓம்காந்தன், ஜெயகுமார் கூட்டணி மிகப்பெரிய மோசடி நடத்தி 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து வெற்றி பெற வைத்தது விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
15 நாட்களில் பலர் கைது
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக அரசின் உள்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி உட்பட 20 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 15 நாட்களில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணைக்கு பின்னர் முறைகேட்டில் தொடர்புடைய 3 விஏஓக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த 10-ம் தேதி கைது செய்தனர்.
40 பேருக்கு வலை
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முறைகேடுகள் தொடர்பாக மேலும் 40 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.. டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் இதுவரை 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் முதல் இடைத்தரகர்கள் என பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் மீண்டும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. பணம் கொடுத்து வெற்றி பெற்றவர்கள், உதவியர்கள் என பலரும் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.