ஒன்றுபடு.. மீம்ஸ் போடு.. நடந்த புதிய போராட்டம்.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வந்த நல்ல செய்தி
நேற்று ஹேஷ்டேக் போராட்டம் நடத்தியவர்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி நல்ல செய்தி கூறியிருக்கிறது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தேர்வு நடந்து 3 மாதம் முதல் 4 மாதங்களில் வெளியாகும். ஆனால் தேர்வு நடந்து 7 மாதங்கள் கடந்த நிலையில் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.
இதனால் வேதனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து நேற்று ட்விட்டர் வழி போராட்டத்தை நடத்தினர்.இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டாப் டிரெண்டிங்காக மாறியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்வீட் போட்டிருந்தார்கள்.
இதனால் ஊடகங்களில் செய்திகளும் நேற்று வெளியானது. இந்நிலையில் நேற்று ஹேஷ்டேக் போராட்டம் நடத்தியவர்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி நல்ல செய்தி கூறியிருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது .

குரூப் 4 தேர்வு
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் 24 ஆம் நாள் தேர்வும் நடைபெற்றது. சுமார் 18 லட்சம் பேர் இந்த தேர்வை அப்போது எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வழக்கமான காலகட்டம் என்றால் கடந்த அக்டோபர் மாதமே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாவது தள்ளிப்போனது. முதலில் டிசம்பர் மாதம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் டிசம்பரில் வெளியாகவில்லை. ஜனவரியிலும் வெளியாகவில்லை. பிப்ரவதி மாதம் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவது ஏன் என்று கேள்வி எழுப்பி அறிக்கையும் வெளியிட்டனர். குரூப் 4 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதன் பின்னணியில் பல கட்டுக்கதைகள் பரவின. இதனால் தேர்வு எழுதியவர்கள் மனஅழுத்தத்தை சந்தித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் டிஎன்பிஎஸ்சி அமைப்பே குரூப்4 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவது ஏன் என்பது குறித்து விளக்கமும் அளித்தது.

ஏன் தாமதம்
டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள்
தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும். எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.

தனியாக ஸ்கேன்
கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும், இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது, ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது. மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம். என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.' இவ்வாறு டிஎன்பிஎஸ் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

போராட்டம்
இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் 7 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாமல் தாமதம் ஆனதால் சுமார் 18 லட்சம் தேர்வர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் வேதனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து நேற்று போராட்டம் நடத்தினர். இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டாப் டிரெண்டிங்காக நேற்று மாறியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் போடப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் படத்தை வைத்து ஒருவர் இதெல்லாம் ரொம்ப தப்புங்க என்று ட்வீட் போட்டிருந்தார்.இன்னொருவரோ வெற்றிக்கொடி கட்டு பார்த்திபன், சார்லி சந்திப்பை வைத்து மீம்ஸ் போட்டார. இன்னொரு ட்விட்டர்வாசியோ வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் தனுஷ், சமுத்திரக்கனி காட்சியை வைத்து மீம்ஸ் போட்டார்.

டிஎன்பிஎஸ்சி
இப்படி மீம்ஸ் போட்டு போராடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நல்ல செய்தி கூறியிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தேர்வாணையத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. நேற்று ஒன்றுபட்டு ட்விட்டரில் குரல் கொடுத்து போராட்டம் நடத்தியவர்களுக்கு இன்று விடை கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications