TNPSC Results.. குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது.. வெளியான அடிதூள் அறிவிப்பு.!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அரசு வேலை மீது எப்போதும் தனி ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. பணி உத்தரவாதம் உள்ளிட்ட காரணங்களால் இப்போதும் நம்ம ஊர் இளைஞர்கள் அரசு வேலைக்கே ரெடியாகிறார்கள்.

மத்திய அரசின் வேலைகளுக்கும் சரி மாநில அரசின் வேலைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் முயல்கிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் தேர்வு எழுதுபவர்களைப் பார்த்தாலே இது நமக்குப் புரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே இருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தான் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற க்ரூப் 4 தேர்வு முடிவுகள் பல மாதங்கள் வெளியாகாமலேயே இருந்தது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில் க்ரூப் 1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவலைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் துணை ஆட்சியர், போலீஸ் எஸ்பி, உதவி ஆணையர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்பத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 1,90,957 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேர்வர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 5446 பணியிடங்களை நிரப்பக் கடந்த பிப். மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications