திமுக அரசுக்கு டென்சன்.. இன்று சென்னையில் ஆசிரியர்கள் முற்றுகை! அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்று சென்னையில் முற்றுகை போராட்டமும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதிக்குப் பின்னர் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓரு ஊதியத் தொகுப்பும், 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதைவிட குறைவான ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிற.

வெறும் ஒரு நாள் வித்தியாசத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.3,170 குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசிடம் இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல அதிகளவிலான பெண் ஆசிரியர்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களின் பணி முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் வெளியான 243 ஆம் எண் அரசாணையை ரத்து செய்யவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் உட்பட 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளான பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களை காவல்துறை கைது செய்தது. அதையும் மீறி ஆசிரியர்கள் தினமும் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
2021 தேர்தலில் திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியத்தை நிறைவேற்றக் கோரி போராடி வருவதாக கூறும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அடுத்த கட்டப் போராட்டத்தை இன்று முன்னெடுக்கின்றனர். 2 நாட்களில் தங்களை அழைத்து பேசி தீர்வு வழங்காவிட்டால் பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தை தொடங்குவோம் என ஆசிரியர்கள் அறிவித்து இருந்தனர். அவர்களின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று முற்றுகை போராட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications