மதுரையில் மண் குளிர பெய்த மழை..20 மாவட்டங்களில் ஜில்லென பெய்யுமாம்..சென்னையில் கூல் கிளைமேட்
சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் இரண்டு நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. மதுரையில் மண் குளிர பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. அக்னியாக வெயில் சுட்டெரிக்கிறது கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் இந்த வெயிலைக் கண்டு பகலில் எங்காவது ஒதுங்கவேண்டும் என தோன்றுகிறது. வயதானோர் உள்ளிட்ட சிலர் வெளியில் செல்வதையே தவிர்த்து விடுகின்றனர்.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே இடி மின்னலுடன் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது.
மதுரையில் ஞாயிறன்று பல்வேறு இடங்களில் பெய்தது. ஒருசில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு 7 மணிக்கு மேல் மேக கூட்டங்கள் திரண்டு திடீரென மழை கொட்டியது. மதுரை நகர், புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சிறிது நேரம் கனமழை பெய்தது. திருமங்கலம், டி.குண்ணத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கோடை மழை, வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வகையில் இருந்ததால் மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications