பிச்சுகிட்டு போகுது பீன்ஸ்..பிடிக்க முடியாது பீட்ரூட்டை! பாக்கெட்டை பதம் பார்க்கும் காய்கறிகள் விலை!
சென்னை: கோடைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தக்காளி விலை மட்டுமே 20 ரூபாய்க்குள் இருக்கிறது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக பீன்ஸ், பீட்ரூட், கத்தரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். மழைக் காலம் தொடங்கி விட்டதால் இனி தக்காளியின் விளையும் அதிகரிக்கும் என்கின்றனர் விவசாயிகள்.
தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் இருந்தே கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது.
தற்போது வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. வழக்கமாக வெயில் காலங்களில் தக்காளியின் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றின் விலை மிகக் கடுமையாக குறையும்.

அதே நேரத்தில் வெயில் தாக்கம் காரணமாக சின்ன வெங்காயம், பீன்ஸ், கத்தரிக்காய், கேரட் ஆகியவற்றின் விலை அதிகரிப்பது வழக்கம். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மேற்கண்ட காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து இருக்கிறது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை ஏறக்குறைய 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்றைய நிலவரப்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் அதிகபட்சமாக பீன்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல இஞ்சி 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், கேரட் 60 ரூபாய்க்கும், பூண்டு 280 க்கும், முருங்கைக்காய் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பெரிய வெங்காயம் 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. குறைந்தபட்சமாக தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த பல வாரங்களாக முருங்கைக்காய் விலை உச்சத்தில் இருந்து நிலையில் தற்போது குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ முருங்கைக்காய் 200 ரூபாய் வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை மட்டுமே. இங்கு மொத்தமாக காய்கறிகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் காய்கறி என்றால் அது தக்காளி மட்டும் தான். தற்போது ஒரு கிலோ 25 ரூபாய் முதல் தரத்துக்கு ஏற்ப விற்பனை ஆகிறது. அதிகபட்சமாக சில்லறை விற்பனை கடைகளில் 30 ரூபாயை தாண்டி விற்பனையாவதில்லை. தற்போது மழைக் காலம் தொடங்கி இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வழக்கம் போல ஜூன் மாதத்தில் இருந்து தக்காளி விலை விண்ணை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 150 ரூபாய் வரை தக்காளி விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications