பெட்ரோலுக்கே செம டஃப் கொடுக்கும் தக்காளி! சென்னை கோயம்பேட்டிலேயே இந்த விலையா? அப்போ மற்ற இடங்களில்?
சென்னை: கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.100ஐ எட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று ரூ.60-80 வரை விலை குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கிலோ ரூ.120ஐ எட்டியிருக்கிறது.
சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் இடமாக கோயம்பேடு சந்தை இருக்கிறது. இந்த சந்தைக்கு தினமும் 1,200 டன் காய்கறிகள் வரும். ஆனால் பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால் இன்று இதில் 60 சதவிகித (400 டன்) லாரிகளில்தான் லோடு வந்து இறங்கி இருக்கிறது.

ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தக்காளி வராததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு பெட்டி ரூ.1000 - ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடுமையான வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும் வரும் வாரங்களில் இரண்டு முகூர்த்த தினங்கள் இருப்பதால் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றும் வியாபாரிகள் கூறியுள்ளனர். கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையிலேயே கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது எனில், சில்லறை கடைகளில் விலை ரூ.150ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறுகையில், "சில நேரங்களில் வரத்து அதிகமாக இருந்தால் விலை குறைந்துவிடுகிறது. அதே வரத்து குறைவாக இருப்பின் விலை அதிகரித்து விடுகிறது. எங்களுக்கு போதுமான அளவில் குளிர்சாதன கிடங்கு அமைத்து கொடுத்தால் அதிக வரத்து இருக்கும்போது அதை சேமித்து வைத்து வரத்து குறையும் போது இயல்பான விலையில் எங்களால் விற்பனை செய்ய முடியும். இதற்கு அரசு ஆதரவளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், "ஆண்டின் 365 நாட்களிலும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும் " என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications