இப்படியே விட்டா நாளைக்கு நீதிபதியை டிஸ்மிஸ் செய்வார் ஆளுநர்.. அமைதியா இருக்கலாமா? வில்சன் ஆவேசம்!
சென்னை: இப்படியே விட்டால் நாளை ஒரு நீதிபதியை டிஸ்மிஸ் செய்வார் ஆளுநர் ரவி, அப்போதும் அமைதியாக இருக்க முடியுமா? என திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி நேற்று உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக கூறிய நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
ஆளுநரின் செயல்பாட்டுக்கு திமுக மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கடுமையான எதிர்வினைகள் ஆற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை விளக்கிப் பேசியுள்ளார் திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன்.

வில்சன் பேசுகையில், "உச்ச நீதிமன்றம் லில்லி தாமஸ் வழக்கிலும் சரி, மனோஜ் நருல்லா அரசியல் சாசன அமர்விலும் சரி தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ஊழல் குற்றசாட்டை எதிர்கொள்ளும்போது அமைச்சரவையில் இருக்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், தகுதி நீக்கம் செல்லுபடியாகாது என்று உத்தரவிட்டுள்ளனர். அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்துகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக இவர் அமைச்சராக இருக்கக்கூடாது என எப்படி ஆளுநர் சொல்லலாம்?
ஒருவர் அமைச்சராக இருக்கலாம் இருக்கக்கூடாது என தன்னிச்சையாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஆளுநருக்கு இதற்கு பவர் எங்கே இருக்கிறது? இதை இப்படியே விட்டால் நாளை நீதிபதியை டிஸ்மிஸ் செய்வார் ஆளுநர்.. அப்போதும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா? ஆளுநரின் முடிவை நிராகரிப்பதே சரியானது. இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.
ஆரம்பத்தில் இருந்தே அவரது செயல்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்றால் அது வெற்றிடம் தான். சட்டத்தின் பார்வையில், எந்த நடவடிக்கையும் சூன்யம் தான். ஆளுநர் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சரியான நடவடிக்கை எடுத்து, அவரது உத்தரவை நிராகரிக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications