கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை- கொட்டும் கனமழை: 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழகத்தில் உக்கிரம் காட்டும் வடகிழக்கு பருவமழையால் நாளை 14 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. சென்னையில் இருந்து 150 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள இக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சென்னை அருகே கரையைக் கடக்கும் 2-வது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.
மொத்தம் 7 மைதானங்கள்.. எங்கே, எப்போது நடக்கிறது டி20 உலக கோப்பை 2022.. வெளியானது அட்டவணை
கனமழை நீடிப்பு
இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இக்காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் விடாது கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை அருகே கரையை கடக்கும்
வங்க கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கி.மீ.வேகத்தில் நகர்ந்து சென்னை அருகே கரையை கடப்பதால் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தீவிர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
14 மாவட்டங்களுக்கு லீவு
இதனையடுத்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளையும் 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்ல்பட்டு, அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் லீவ்
மேலும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள வெதர்மேன், சென்னையில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றழுத்த மண்டலம் சென்னையின், கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் எல்லை பகுதிக்குள் வந்த பின் காற்றின் வேகம் குறையும். பொதுவாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வடக்கு எல்லையோரப் பகுதியில்தான் காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.