நாளை கடைசி நாள்.. வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் பிரச்சனை.. காலக்கெடு நீட்டிப்பு? விவரம்
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளைக்கு முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் ஐடிஆர் தாக்கல் செய்யும் இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்வோர் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம் நாட்டில் ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்துக்கு ஏற்ப அரசுக்கு வருமான வரி செலுத்த வேண்டும். இந்த வருமான வரி என்பது ஒவ்வொருவரின் வருமானத்தை பொறுத்து மாறுபடும். அந்த வகையில் 2023-24ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை (ஐடிஆர்) ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது வருமான வரி செலுத்துவதற்கான இணையதளம் சென்று பலரும் தாக்கல் செய்து வருகின்றனர்.
பொதுவாக இந்த வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளம் அவ்வப்போது செயல்படாமல் இருக்கும். இந்நிலையில் தான் தான் வருமான வரி தாக்கலுக்கு கடைசி தேதி நெருங்கும் நிலையில் நேற்று முதல் வருமான வரித்துறையின் இணையதளம் சரியாக செயல்படாத நிலையில் உள்ளது. அதாவது நேற்று முதல் இன்று வரை ஏராளமானவர்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது சில தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பலரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
அதாவது வருமான வரி தாக்கல் செய்வோர் படிவம் 26AS, AIS மற்றும் TIS போன்ற தேவையான படிவங்களை டவுன்லோட் செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களால் அந்த படிவங்களை டவுன்லோட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மேலும் இ- பைலிங் மற்றும் கட்டணம் செலுத்தும் முறையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் பலரும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அமித் ரதி என்பவர், ‛‛இரவு முழுவதும் முயன்றும் கூட வருமான வரித்துறையின் இணையதளத்தில் இருந்து 26 AS, AIS, TIS படிவங்களை டவுன்லோட் செய்ய முடியவில்லை. இதனால் இயங்கும் இணையதளத்தை வருமான வரித்துறை, மத்திய நிதி அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன் அலுவலகம், பிரதமர் அலுவலகம் வழங்க வேண்டும்'' என அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளார்.
மேலும் சாய் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஐடிஆர் 3 தாக்கல் செய்ய 2 மணிநேரம் செலவழித்துள்ளேன். தற்போது கடைசி 30 நிமிடங்கள் வீணாகிவிட்டது. ஏனென்றால் ஆட்டோமெட்டிக்காக நிரம்பும் எண்கள் அனைத்தும் ஏஐஎஸ்ஸில் இருந்து போய்விட்டன. மீண்டும் இணையதளத்தை லாக்இன் செய்ய முடியவில்லை'' என தெரிவித்துள்ளார். அதேபோல் ஸ்ரீதர் ஷா என்பவர், ‛‛டியர் வருமான வரித்துறையே, ஒவ்வொரு ஆண்டும் தரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
இப்படி பிரச்சனைகள் இருந்தாலும் கூட வரி செலுத்துவோர் வருமான வரி இணையதளத்துடன் போராடி வருகின்றனர். ஏனென்றால் வருமான வரி தாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும். அதற்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இத்தகைய சூழலில் தான் பலரும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதியை மத்திய அரசு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். ஆனால் தற்போது வரை வருமான வரித்துறை சார்பில் காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications