சென்னை மற்றும் புறநகரில் ரேஷன் கடைகளில் எங்குமே துவரம் பருப்பு இல்லை.. என்ன காரணம்?
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.. ரேஷன் கடையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை வழங்கப்படுகிறது. ஆனால் துவரம்பருப்பு மட்டும் வாழங்கப்படாத நிலை தொடர்ந்து நீடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி விலையில்லாமலும், சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்றவை மானிய விலையிலும் வழங்கப்படும். 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் இதன் மூலம் பயன்பெறுகின்றன.

இந்நிலையில் சென்னையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொதுவினியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு வழங்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொதுவாக ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படுகின்றன. ஆனால் பாமாயில், துவரம்பருப்பு போன்றவை உடனே வழங்கப்படுவது இல்லையாம். போய் அடுத்த வாரம் வாருங்கள் என்று அறிவிப்பது அடிக்கடி நடக்கிறதாம். சென்னையைவிட தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இந்த நிலை அடிக்கடி நடக்கிறது என்றும் புகார்கள் உள்ளது.
துவரம் பருப்பு விலை ஒரு கிலோ 170 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. பாமாயில் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.. ஆனால் தமிழக அரசு ரேஷன் கடைகளில் கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கிறது. இதன் காரணமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை எப்படியாவது ரேஷன் கடையில் வாங்கி சமாளிக்கலாம் என்று நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஏனெனில் கடந்த 3 மாதங்களாகவே ரேஷனில் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக நுகர் பொருள் வாணிபக் கழகம் 20,000 டன் துவரம் பருப்பு, அல்லது கனடா மஞ்சள் பருப்பு , 2 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கடந்த ஏழாம் தேதி டெண்டர் கோரியது.
அதில் கிலோ துவரம் பருப்புக்கு குறைந்த விலையாக 189 ரூபாய், இறக்குமதி துவரம் பருப்புக்கு 179 ரூபாய், கனடா பருப்புக்கு 165 என டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள் விலை புள்ளி வழங்கி இருக்கின்றன .வெளிச்சந்தையில் தற்போது துவரம் பருப்பு விலை 170 ரூபாயாகவும் கனடா பருப்பு விலை 130 ரூபாய் ஆகவும் இருக்கிறது. இதனால் கனடா பருப்பை அதிக விலைக்கு வாங்க அனுமதிக்ககூடாது என்றும் குரல்கள் எழுந்துள்ளன. இதனால் அதிக விலை கிடைத்த டெண்டரை ரத்து செய்துவிட்டு மறு டெண்டர் கோர அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் ரேஷனில் துவரம்பருப்பு வழங்கப்படாதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ரேஷனில் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை தொடர்ந்து 3-வது மாதமாக ஜூன் மாதத்திலும் வழங்கப்படவில்லை. ஏழை மக்களுக்கான அத்தியாவசிய தேவையான பருப்பு, பாமாயில் ஆகியவை தொடர்ந்து 3-வது மாதமாக வழங்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களின் இருப்பு குறித்தும், மே மாதம் வழங்கப்பட வேண்டிய அந்த பொருட்கள் ஜூன் முதல் வாரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, நேற்று வரை அப்பொருட்கள் வழங்கப்படாத நிலையில், அதற்கான காரணம் என்ன? அட்டைதாரர்களுக்கு அப்பொருட்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எந்த விளக்கத்தையும் கடந்த 18 நாட்களாக வெளியிடவில்லை. இதில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை தான் தமிழக அரசின் மவுனம் காட்டுகிறது.
பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகும் நிலையில், மக்களுக்கு அந்த பொருட்கள் இன்னும் வழங்கப்படாததன் மூலம் சிறப்பு பொதுவினியோக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு படுதோல்விடைந்துவிட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நிறுத்தப்பட்ட உளுத்தம் பருப்பு மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வரை அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் தமிழக மக்கள் அரசின் மீது கோபம் அடைந்துள்ளனர். இதை புரிந்துகொண்டு மக்களுக்கு வழங்கப்படவேண்டிய பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை உடனே வழங்க தமிழக அரசின் பொதுவழங்கல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications