"ஒட்ட நறுக்குங்கள்.. பாஜகவின் மதவெறி ஆட்டத்தை முடித்து வையுங்கள்.. "தலை"களிடம் டிஆர் பாலு ஆவேசம்
முதல்வரின் புத்தக வெளியீட்டு விழாவில் டிஆர் பாலு முக்கிய கோரிக்கை விடுத்தார்
சென்னை: "தேர்தல் காலத்தில் தனித்தனியாக நிற்பதால் வாக்குகள் சிதறுகிறது.. அதனால், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. இனியாவது மதத்தை வைத்து ஆட்டம் போடும் பாஜகவுக்கு முடிவு கட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும்" என்று டிஆர் பாலு சென்னையில் நடந்த புத்தக விழாவில் கோரிக்கை விடுத்தார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான "உங்களில் ஒருவன்" முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்... கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

டிஆர் பாலு
இந்த சுயசரிதை நூலில், முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்... திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. விழாவில் டிஆர் பாலு பேசியதாவது:

வெறும் 37 சதவீதம்தான்
303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் பாஜக.. அவங்களை யார் அடக்குவது? 303 பேர் இருக்காங்க.. அவர்களை வெற்றி பெற செய்தது யார்? இத்தனைக்கும் அவர்கள் பெற்ற வாக்குசதவீதம் வெறும் 37% மட்டுமே... இவர்கள் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.. இன்று இந்த மேடையில் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.. இந்த நிலை மேலும் மேலும் தொடர வேண்டும்..

மதச்சார்பின்மை
1996ம் ஆண்டு போல, 2004-ம் ஆண்டு போல மேலும் சில நண்பர்களையும் இணைத்து கொண்டு, ஒற்றுமையாக போரிட்டால்தான் மதவாதத்தை ஒடுக்க முடியும்.. திராவிட மாடல் அரசியல், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மையும் மலரும்.. நேரில் பார்க்கும்போது ஒருவரையொருவர் கட்டி தழுவி கொள்கிறோம்.. வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடுகிறோம்.. ஆனால், தேர்தல் என்று வந்தால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் தனித்தனித்தனியாக பிரிந்து போய்விடுகிறோம்..

தென்னகம்
இப்படி பிரிந்து போவதால்தான், நாட்டில் பெரிதாக மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை.. இனிமேலாவது நாம் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து எப்படியாவது மதவெறி ஆட்டத்தை இந்த தடவையோடு முடித்து வைக்கப்பட வேண்டும்.. தென்னகத்தில் தமிழகத்தில் தலைவர்கள் இன்று கூடியது போல கூட வேண்டும்.. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை என்பதுதான் திராவிட மாடல் அரசியல்.. யார் தலைமையில் வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.

மதவாத பாஜக
ஆனால், தேர்தல் காலத்தில் தனித்தனியாக நிற்பதால் வாக்குகள் சிதறுகிறது.. இதனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. இனியாவது மதத்தை வைத்து ஆட்டம் போடும் பாஜகவுக்கு முடிவு கட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும்" என்று டிஆர் பாலு மேடையில் இருந்த தலைவர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications