பயண திட்டத்தை மாற்றுங்க.. சென்னை திரும்புவோருக்கு போக்குவரத்து துறை தந்த முக்கிய அட்வைஸ்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வரும் நிலையில் பயண திட்டத்தை மாற்றுங்கள் என்று போக்குவரத்து துறை முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது. அதன்படி வரும் 19 ம் தேதிக்கு பதில் இன்றும், நாளையும் சென்னை திரும்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கடந்த 14ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் மாட்டு பொங்கல், நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வந்தனர்.

அவர்கள் சொந்த ஊர்களில் சொந்த பந்தத்துடன் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடினர். பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி முதல் வரும் 19ம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டனர். தற்போது சென்னை வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று முதல் மீண்டும் பொதுமக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். தற்போது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மட்டுமே சென்னை திரும்பி வருகின்றனர். ஆனால் அதற்குள்ளாகவே நேற்று சென்னையில் பல இடங்களில் இரவில் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டது.
அதோடு இன்னும் ஏராளமான மக்கள் வரும் 19ம் தேதி தான் சொந்த ஊர்களில் இருந்து சென்னை புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இவர்கள் தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுக்க தயாராகி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 19 ம்தேதி ஒரே நேரத்தில் பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஜனவரி 19 ம் தேதிக்கு பதிலாக இன்றும், நாளையும் பயண திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்று அறிவுரை வழங்கி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை பொங்கல், தீபாவளி உள்பட தொடர் விடுமுறையின்போது பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்போதும், அதன்பிறகு அவர்கள் மீண்டும் சென்னை திரும்பும்போதும் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்படும். வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்லும். இத்தகைய நிலை இந்த முறை வந்துவிடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து துறை இந்த அட்வைஸை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications