நெல்லை, குமரி போறீங்களா.. இன்னைக்கு ரயில் செங்கல்பட்டிலிருந்துதான்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று நெல்லை, பொதிகை மற்றும் கன்னியாகுமரி ரயில்கள் எழும்பூரிலிருந்து இயக்கப்படுவதற்கு பதில், செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்களை சென்னையுடன் இணைப்பதில் தாம்பரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சில ரயில்கள் தாம்பரத்தை முனையமாக கொண்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது, தாம்பரம் ரயில் நிலைய தண்டவாளத்தில் ஏற்கெனவே 220 கிலோ ஸ்லீப்பர் கற்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கற்கள் அகற்றப்பட்டு புதியதாக 300 கிலோ எடை கொண்ட ஸ்லீப்பர் கற்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே ஒரு கி.மீ தொலைவுக்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. எனவே, சென்னை கடற்கரை டூ தாம்பரம் வரையில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை நாளை வரை (ஆக.18) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமாக 63 மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
மட்டுமல்லாது சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையிலும், மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது வழக்கமாக எழும்பூரிலிருந்து இயக்கப்படும் நெல்லை விரைவு ரயிலும் (12631), செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலும் (12661), கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ரயிலும் (12633) இன்று எழும்பூருக்கு பதிலாக, செங்கல்பட்டிலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர எழும்பூரிலிருந்து இரவு 9 மணிக்கு காரைக்கால் செல்லும் விரைவு ரயில் (16175) இன்று ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே அவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆக.15 முதல் 18ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் மற்றும் இரவு 10 மணி முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் ஆகஸ்ட் 15 -18 வரை தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வே நிலையத்திற்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகள் இயக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications