கிளாம்பாக்கம் அரசு பஸ்ஸில் டாப்பில் யாரு சார்.. அமைச்சர் சிவசங்கரை பார்த்ததுமே திகைத்து போன மக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளுக்கும், ஆம்னி பேருந்துகளுக்கும் டிக்கெட் கட்டணத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆம்னி பேருந்துகளில் வார இறுதிகளில் 1000க்கணக்கில் கொட்ட வேண்டும். ஆனால் அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் ஒரே மாதிரி தான் இருக்கும். ஏழை எளிய மக்கள் பலர் எஸ்இடிசி எனப்படும் விரைவு பேருந்துகளில் பயணிக்கிறார்கள். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை கிளாம்பாக்கம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை எஸ்இடிசி பேருந்தில் தான் பயணித்தார்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக எஸ்இடிசி என்று அழைப்பார்கள். இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் கோவை, பெங்களூரில் இருந்தும் பல்வேறு நகரங்களுக்கு எஸ்இடிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பேருந்துகளை பொறுத்தவரை கட்டணம் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும்.

சென்னையில் இருந்து கோவைக்கோ மதுரைக்கோ 500க்குள் டிக்கெட் எடுத்து எஸ்இடிசி பேருந்தில் பயணிக்க முடியும். படுக்கை வசதி பேருந்துகளுமே ஏசி என்றால் அதிகபட்சம் 900 என்கிற அளவில் தான் இருக்கும். ஏசி அல்லாத பேருந்துகள் 750 முதல் 800 வரையில் இருக்கும். இந்த கட்டணம் எப்போதுமே நிலையானதாக இருக்கும்.
ஆனால் ஆம்னி பேருந்துகள் கூட்டம் இல்லாத நாளில் ஒரு கட்டணமும், கூட்டம் உள்ள நாளில் ஒரு கட்டணமும் வசூலிக்கின்றன. உதாரணமாக சென்னையில் இருந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் ஒரு கட்டணமும், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஒரு கட்டணமும் வசூலிக்கின்றன. அதாவது சென்னையில் இருந்து ஊருக்கு மக்கள் அதிகமாக செல்லும் நாட்களில் கட்டணம் அதிகமாக இருக்கும். அதேபோல் ஊர் திரும்பும் நாளிலும் கட்டணம் அதிகமாக இருக்கும். மக்கள் அதிகம் பயணிக்காத வார நாட்களில் மட்டுமே கட்டணம் குறைவாக இருக்கும்.
ஆம்னி பேருந்துகளில் பணக்காரர்கள் பலர் பயணிக்கிறார்கள். எஸ்இடிசி பேருந்துகளில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய மக்கள் விரும்பி பயணிக்கிறார்கள். இந்நிலையில் எஸ்இடிசி பேருந்துகளை பொறுத்தவரை மற்ற ஆம்னி பேருந்துகளை போல் வேளச்சேரி வரையிலோ அல்லது திருவான்மியூர் வரையிலோ பயணிப்பது இல்லை.
அதேபோல் கோயம்பேடும் செல்வது இல்லை என்பதால் தான் ஆம்னி பேருந்துகளை மக்கள் நாடும் நிலை இருப்பதாக ஆதங்கம் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்றும், அடையாறு, கோயம்பேடுக்கு கணிசமான பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. குறைந்த பட்சம் தாம்பரம் வரையில் இயக்கினால் அரசு பேருந்துகளில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை கிளாம்பாக்கம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வரை அரசு விரைவு பேருந்தில் தான் பயணித்தார். அமைச்சர் சிவசங்கரின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தேவனூர் ஆகும். அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த ஊருக்கு செல்ல நேற்று அரசு பேருந்தில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அரசு பேருந்தில் அமைச்சர் சிவசங்கரை பார்த்ததுமே டிரைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களுமே வியந்து போனார்கள்.. டிரைவர்களுடன் கலகலப்பாக பேசியபடி, அமைச்சர் சிவசங்கர் நேற்று சொந்த ஊர் சென்றார்.












Click it and Unblock the Notifications