ஒரே பாலத்தில் 4 ரயில்கள்; இந்தியாவிலேயே முதன்முறை! வியக்க வைக்கும் சென்னை!
சென்னை: போரூர் டூ ஆழ்வார் திருநகர் வரை அமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பாதையில் ஒரே சமயத்தில் 4 ரயில்களில் பயணம் செய்ய முடியும் என்றும் இந்த மாதிரியான ஒரு திட்டம் ஆசியாவிலேயே முதன்முறையாகச் செயல்வடிவம் பெற உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
சென்னையில் முதன்முதலாக மெட்ரோ ரயில் சேவை 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 54.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட பச்சை மற்றும் நீலம் ஆகிய இரண்டு வழி பாதைகளில் முதற்கட்டமாக 42 வண்டிகள் இயக்கப்பட்டன. மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட பிறகு சென்னை மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. எந்தவித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மக்கள் குறித்த நேரத்திற்குள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. ஆகவே, தமிழக அரசு இந்தத் திட்டத்தை மதுரை, கோவை என சில மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி வருகிறது.

சென்னையில் விமானநிலையம் முதல் தொடங்கி கோயம்பேடு வழியாகச் சென்னை சென்ட்ரல் வரை ஒரு பாதையும் மற்றொரு பாதைசென்ட்ரல் தொடங்கிக் கிண்டி வழியாக ஏர்போர்ட் வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது சென்னையில் புதுமையான இரட்டை அடுக்கு மெட்ரோ திட்டம் செயல்வடிவம் பெற்றுவருகிறது.
இதில் ஒரே நேரத்தில் 4 ரயில்களை இயக்க முடியும். ஆசியாவிலேயே இந்த 4 வழி மெட்ரோ பாதை வடபழனி தொடங்கி ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய இரண்டு வெவ்வேறு அடுக்குகளில் மொத்தம் 5 கி.மீ. மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தரையிலிருந்து 50 அடி உயரத்தில் 4ஆம் வழித்தடம் ஒன்றும் அதேபோல் 70 அடி உயரத்தில் 5 ஆம் வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதைகளில் அதிக நெருக்கடி உள்ள சாலைகளில் இதை உருவாக்குவது சவாலான காரியம் என்கிறார் பொறியாளர் தயானந்த கிருஷ்ணன். அவர் இத்திட்டம் பற்றிப் பேசும்போது, "போரூர் முதல் ஆழ்வார் திருநகர் வரை இரண்டு அடுக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்படி ஒரே நேரத்தில் 4 ரயில்கள் மேம்பாலத்தில் பயணிக்கும்படி கட்டப்படுவது ஆசியாவிலேயே இதுதான் முதல் தடவை. மேல் அடுக்கு பாலத்தில் 2 ரயில்கள் செல்ல முடியும். கீழ் அடுக்கு பாலத்தில் அதற்கு இணையாக 2 ரயில்கள் செல்ல முடியும். ஆகவே, இந்தக் கட்டுமான உலகத் தரத்தில் மிகவும் பலமாகக் கட்டப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளின் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட அனைத்து பைலிங் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது. 78%, பைல் கேப் நிறுவும் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்கிறார்கள். நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள்தான் பாலம் அமைக்கப்படும் பணியை விடச் சவால் நிறைந்ததாக இருந்தது என்றும் கட்டுமான அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வடபழனி டூ போரூர் மிகவும் குறுகலான அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. அதில் இந்தளவுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டதே மாபெரும் சவால்.
தற்போது, குறிப்பிடத்தக்க பையர் ஆர்ம்ஸ் அமைத்தல், தாழ்வார இடைவெளி பகுதிகளில் யூ டைப் கர்டர்களை அமைத்தல் ஆகிய வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும், சென்னையின் இரட்டை அடுக்கு மெட்ரோ நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.
வாகன நெரிசலில் சிக்கித் தவித்து வந்த மக்கள் ஏசியில் குளுகுளு என்று உடல் கசங்காமல் போய் வீட்டை அடைய உள்ளனர். இந்தப் பாதையில் ரயில் இயங்க தொடங்கினால், சென்னை முழுவதும் ஒரு இணைப்பை நகரம் பெற்றுவிடும். அதன்பின்னர் ஹாய் ஆக அப்படியே மேம்பாலம் வழியே பறக்கலாம்.

பூமிக்கு அடியில் மெட்ரோ ரயிலில் பறந்து அனுபவம் பெற்ற மக்கள் இனி இரட்டை அடுக்கு பாதைகளில் பயணம் செய்வது ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கப் போகிறது. ஆகவே இந்தப் பயணம் இதுவரை பெறாத அனுபவமாக இருக்கும். மத்திய அரசு தமிழக மெட்ரோ திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என்று திமுக புகார் கூறிவரும் நிலையிலும் இந்த மாதிரியான ஒரு சாதனையை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications