தலையை சுற்றி காதை தொடும் கேள்விகள்! புலம்பும் TNTET தேர்வர்கள்! டிஆர்பி சொல்லப்போகும் விளக்கம் என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் பணி, பணியில் பதவி உயர்வு உள்ளிட்ட தகுதிகளுக்கு டெட் தேர்வு ரொம்பவும் முக்கியம். இப்படி இருக்கையில், சமீபத்தில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு (Special TN TET) - பேப்பர் 2 தேர்வு எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் புலம்பியுள்ளனர். எனவே இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அளிக்கப்போகும் விளக்கம் என்ன? என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
இப்போது தேர்வு எழுதும் ஆசிரியர்கள் ஏற்கனவே 10-15 ஆண்டுகளாக பணியில் இருப்பவர்கள். நீண்ட காலத்திற்கு முன்னரே கற்றலை நிறுத்தியவர்கள். இப்படி இருக்கையில், இவர்களுக்கு வழங்கப்படும் வினாக்கள் நேரடியான கேள்விகளாக இல்லாமல் நடைமுறை பயன்பாடு சார்ந்த கேள்விகளாக இருந்ததுதான் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

என்ன நடந்தது?
நமக்கு தெரிந்தது என்ன? புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நியூட்டன் என்பது மட்டும்தான். நமது பாடத்திட்டங்கள் மற்றும் முந்தைய TET தேர்வுகள் இப்படி நேரடியாக கேள்விகளுக்குதான் நம்மை பழக்கியிருக்கின்றன. ஆனால், சமீபத்தில் நடந்த தேர்வில், பிரபஞ்சத்தில் ஒன்றை மற்றொன்று பிடித்து வைத்துக்கொள்கிறது. இதற்கு பெயர் என்ன? இதை யார் கண்டுபிடித்தார்கள் என்கிற ரேஞ்சுக்கு.. தலையை சுற்றி காதை தொடுவது போன்று கேள்விகள் இடம் பெற்றிருக்கின்றன.
கடினமான வினாத்தாள்
இது நல்ல விஷயம்தான். ஆசிரியர்கள் வெறுமென மனப்பாடம் மட்டும் செய்யக்கூடாது. புரிதலோடு படித்தால்தான் மாணவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்கிற எண்ணத்துடன் இப்படியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆனால், சிக்கல் என்னவெனில் B.Ed போன்ற படிப்புகளும், இதற்கு முன்னர் நடத்தப்பட்ட டெட் தேர்வுகளும் நம்மை நேரடி கேள்விகளுக்குதான் தயார் செய்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - பேப்பர் 2 கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
சிக்கலான கேள்விகள்
அதிலும் சில கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். குறிப்பாக 'குழந்தைகள் உளவியல் மற்றும் கற்பித்தல்' இந்த பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் சவாலானதாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க நீண்ட நேரம் யோசிக்க வேண்டி இருந்ததால், 3 மணி நேரம் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர்.
பதில் சொல்ல வேண்டிய தேர்வு வாரியம்
தேர்வு வாரியம் இதற்கு முன்னர் இப்படி கடினமான தேர்வுகளை நடத்தியதில்லை என்பதால், இந்த தேர்வு குறித்து தேர்வு வாரியம் ஏதேனும் விளக்கமளிக்குமா? என்பதை தேர்வர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். முதலில் தற்காலிக விடை குறிப்புகளை தேர்வு வாரியம் வெளியிடும். இதை தங்கள் விடைகளோடு ஒப்பிட்டு பார்த்து.. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அதை தெரிவிக்கலாம். பின்னர் இறுதி குறிப்பும், தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications