பர்த்டே வாழ்த்துகள் அண்ணா.. அப்படியே அதையும் கொடுங்கண்ணா.. வாழைப்பழத்தில் "ஊசி" ஏற்றிய டிஆர்பி ராஜா!
சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லியதும் இல்லாமல் பிறந்தநாள் பரிசாக மன்னார்குடிக்கு தடுப்பூசி தாருங்கள் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாய தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாநில அரசு கேட்டுக் கொள்கிறது. ஆனால் தமிழகத்திற்கு குறைவான தடுப்பூசிகளையே மத்திய அரசு வழங்கியதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில் சர்வதேச டெண்டர்களை தமிழ்நாடு அரசு கோரி வருகிறது. மேலும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறந்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பான செயல்பாடு
சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா சுப்பிரமணியன் சிறப்பாக செயல்படக் கூடியவர். இவர் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கொரோனா பரவல் குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடித்து வருகிறார்.

ட்விட்டர்
அவருக்கு கடந்த 1ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இவரது பிறந்தநாளை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா மறந்துவிட்டார் போல. அடுத்த நாள் ஜூன் 2ஆம் தேதி தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துகளை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தடுப்பூசி
அதில் அண்ணன் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். நமது முதல்வர் எதிர்பார்த்தபடியே சுகாதாரத் துறையில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்கிறீர்கள். உங்களது பிறந்த நாள் பரிசாக #மன்னார்குடிக்கு #தடுப்பூசி தாருங்கள் அண்ணா என கேட்டுள்ளார்.

டிஆர்பி ராஜா
பொதுவாகவே நகைச்சுவையாக பேசுபவர் டிஆர்பி ராஜா. தங்கள் தொகுதிக்கு தடுப்பூசி தேவையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கேட்டுள்ளது நகைப்பை வரவழைக்கிறது. தொகுதி மக்கள் மீது டிஆர்பி ராஜாவுக்கு அக்கறை அதிகம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications