ஈரோடு கிழக்கில் திமுகவின் வெற்றி்க்கு உதவுகிறாரா "அண்ணாமலை"? என்ன சொல்கிறார் திருச்சி சூர்யா சிவா
திமுக ஜெயிக்க அண்ணாமலையார் தேவைப்படுகிறாரே- திருச்சி சூர்யா சிவா
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு கூட அண்ணாமலையார் தேவைப்படுகிறார் பாருங்கள் என திருச்சி சூர்யா சிவா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து கூட்டணி கட்சியான ஜி.கே.வாசன், பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு பக்கம் உதயநிதி பிரச்சாரம் செய்து முடித்தவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரச்சாரம் செய்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை கடந்த இரு தினங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது பிரச்சாரத்தில் திமுக அரசை பற்றியும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றியும் கூறிவருகிறார். அண்ணாமலை தனது பிரச்சாரத்தில் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆன நிலையில் தினமும் புதுவிதமான பிரச்சினைகளை அரசு கொடுத்து வருகிறது.

33 அமைச்சர்கள்
33 அமைச்சர்களும் மக்களை எப்படி அடைக்கலாம். எப்படி பொய் வாக்குறுதி கொடுக்கலாம் என யோசிக்கிறார்கள். திமுக 22 மாத ஆட்சியில் சம்பாதித்ததை மக்களுக்கு கொடுத்தால் வெற்றி பெறலாம் என கற்பனையுடன் வலம் வருகிறார்கள். தற்போது விசைத் தறியாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக தரப்படும் என சொல்வது வெட்கக்கேடானது.

வாக்காளர்கள்
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வைக்கும் மை காயும் முன்பே இளங்கோவன் சென்னைக்கு சென்று விடுவார். திமுகவின் கூட்டணி தர்மம் சந்தி சிரிக்கிறது. இளங்கோவன் ஏழை மக்களுக்கானவர் அல்ல, தென்னரசு வெற்றி பெறும் போது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். என தெரிவித்துள்ளார்.

உதயநிதி
அது போல் உதயநிதி வழக்கம் போல இந்த தேர்தலுக்கு ஒற்றை செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி கொண்டு வந்தார். அது போல் பதிலுக்கு அண்ணாமலை தனது பிரச்சாரத்தில் பேசுகையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை தொடங்கப்பட்டு 150 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இணைத்து படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்கிறார்.

ஒரு செங்கல் கூட திமுக வைக்கவில்லை
(ஒரு செங்கல்லை காட்டி) இது போல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல்கள் கொண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. தருமபுரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று 2009 தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்கூட திமுக வைக்கவில்லை. எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்த செங்கலை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். 2026 எய்ம்ஸ் மருத்துவமனை பணி முடிந்தவுடன் அவரிடம் உள்ள செங்கலை திருப்பி தரட்டும். தர்மபுரி தொழிற்பேட்டை அமைத்துவிட்டு இந்த செங்கலை தரட்டும் என கடுமையாக விமர்சித்தார்.

திமுக கூட்டணி
வரும் 24 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறார். அன்றைய தினம் எந்த மாதிரியான பதிலடிகளை அவர் தருவார் என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் கொடுப்பதாகவும் புடவை கொடுப்பதாகவும் திமுக கூட்டணி மீதும், கொலுசு கொடுப்பதாக அதிமுகவினர் மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் ஈரோடு கிழக்கில் பட்டுப்புடவையுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன் புகைப்படமும் தேர்தல் நோட்டீஸும் புடவையும் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திருச்சி சூர்யா சிவா , ஈரோடு கிழக்கில் திமுக ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கும் அண்ணாமலையாரே தேவைப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications