பாஜகவிலிருந்தே விலகுகிறேன்.. திருச்சி சூர்யா திடீர் அறிவிப்பு! "கேசவ.." அண்ணாமலைக்கு அதிரடி கோரிக்கை
சென்னை: பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக திருச்சி சூர்யா திடீரென அறிவித்துள்ளார். அத்துடன் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநில ஓபிசி பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
பாஜக காமெடி பன்றாங்க.. 'அவங்க’ ஜெயலலிதாவுக்கு துரோகம் பன்றாங்க! அட்வைஸ் கொடுக்கும் திருமாவளவன்!
பாஜகவில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் திருச்சி சூர்யா. அண்மையில் பாஜக நிர்வாகி டெய்சியை செல்போனில் ஆபாசமாக சூர்யா திட்டிய விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் பாஜக பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என அறிவித்துள்ளார் திருச்சி சூர்யா.
டெய்சி விவகாரம் என்ன?
தமிழக பாஜக சிறுபான்மை அணி தலைவராக இருப்பவர் டெய்சி சரண். அவருக்கும் ஓபிசி பிரிவு தலைவராக இருந்த திருச்சி சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இதன் உச்சமாக, டெய்சி சரணை செல்போனில் அழைத்த திருச்சி சூர்யா மிகவும் ஆபாசமாக, இழிவாக விமர்சித்தார். அத்துடன் டெய்சியை கொலை செய்வதாகவும் மிரட்டினார். இந்த செல்போன் உரையாடல் பதிவு ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் தலைவர்கள் அதிர்ச்சி
தமிழக பாஜக பெண் தலைவர்கள் திருச்சி சூர்யாவின் இந்த செல்போன் உரையாடல் ஆடியோவை கேட்டு அதிர்ந்து போயினர். திருச்சி சூர்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் முதல் குரல் எழுப்பினார். இதனால் காயத்ரி ரகுராம்,கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி 6 மாதம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இது பாஜகவில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது
திருச்சி சூர்யா மீது விசாரணை
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைமை இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைத்தது. இந்த விசாரணைக் குழு முன்பாக திருச்சி சூர்யா, டெய்சி இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த விசாரணையின் போது தமது பேச்சுக்கு சூர்யா மன்னிப்பு கேட்டார். இதன்பின்னர் டெய்சியும் சூர்யாவும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இனி மேல் அக்கா தம்பியாக இருவரும் தொடர்ந்து பயணிப்போம் என கூறினர். இதுவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது.
நேற்று வரை ஆக்டிவ்..இன்று டீ ஆக்டிவ்வா?
அத்துடன் பாஜகவின் ஓபிசி தலைவர் பொறுப்பில் இருந்து சூர்யா 6 மாத காலத்துக்கு நீக்கப்பட்டார். இதனை சூர்யாவும் ஏற்றுக் கொண்டார். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார் திருச்சி சூர்யா. இந்த நிலையில்தான் திடீரென பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்கிறே என ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் திருச்சி சூர்யா.
கேசவ விநாயகம் விவகாரம்
பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சூர்யா, அந்த அறிவிப்பில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் என சாபமும் விட்டிருக்கிறார். கேசவ விநாயகம், மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலேயே தங்கி இருப்பவர். பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற தலைவராக செயல்படுகிறவர் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கேச விநாயகத்தின் மீது முன்வைக்கப்பட்டு வருகிறது. டெய்சி சரண் விவகாரத்தில் கேசவ் விநாயகத்தின் பெயரும் அடிபட்டிருந்தது; கேசவ் விநாயகத்தையும் டெய்சியையும் தொடர்புபடுத்தி திருச்சி சூர்யா விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.