ஏழுமலையானை திருப்பதியில் மட்டுமில்லை... தமிழகத்திலும் தரிசிக்க முடியும்.. அமையப்போகும் 4 கோவில்கள்!
தமிழகத்திலும் பாண்டிச்சேரியிலும் 4 திருப்பதி ஏழுமலையான் கோவில்கள் கட்டப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சென்னை: திருமலை திருப்பதியில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் வெங்கடேச பெருமாளை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வந்து செல்கின்றனர். தமிழக பக்தர்கள் இனி ஆந்திராவிற்கு சிரமப்பட்டு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பாண்டிச்சேரியிலும் திருப்பதி ஏழுமலையான் கோவில்கள் கட்டப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி தேவஸ்தான் திட்டமிட்டு கோவில்களை கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அதுபோல சென்னை அல்லது சென்னைக்கு அருகில் ஏழுமலையான் கோவில் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஒய்.வி ரெட்டி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை, உளுந்தூர்பேட்டை, சென்னை, பாண்டிச்சேரியில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராயநகரில் வெங்கடேச பெருமாள் கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் ஆலோசனைக்குழு துணைத்தலைவர்களாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த், வேலூரைச் சேர்ந்த லட்சுமணன் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் பிரபாகர் ரெட்டி மற்றும் உறுப்பினர்களாக ஆனந்தகுமார், கிருஷ்ணராவ், கார்த்திகேயன் உள்ளிட்ட 24 பேரை தேவஸ்தானம் அறிவித்து இருந்தது. ஞாயிற்றுக்கிழமை சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆலோசனைக் குழுவின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சேகர் ரெட்டி
தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஓரிரு மாதங்களில் முழுமையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

4 புதிய கோவில்கள்
சென்னை, உளுந்தூர்பேட்டை, மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் புதிய வெங்கடேஸ்வரா கோயில்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி ஊத்துக்கோட்டை மற்றும் சீத்தமாஞ்சேரி ஆகிய இடங்களில் பக்தர்களுக்கான தங்கும் இடம், குளியலறை வசதிகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்காக புதுச்சேரி அரசிடம் மாற்று இடம் வழங்கவும், திட்டங்களுக்கு அனுமதி பெற மாநகராட்சியிடம் அனுமதி பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்மாவதி தாயார் கோவில்
சென்னை தியாகராயநகரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதேபோல், ராயப்பேட்டையில் உள்ள காலி இடத்திலும் கோவில் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 28ஆம் தேதி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது.

திருக்கல்யாணம்
சென்னை தீவுத்திடல் மற்றும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான முறையில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வரும் மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மதுரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்காக கட்டிட கலைஞரை அடையாளம் காணுதல் மற்றும் திட்ட ஒப்புதலுக்கு நிறுவனத்திடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் வெங்கடேஸ்வரா கோயில்
ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஆண்டு இறுதியில் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். இதனையடுத்து பேசிய சென்னை எல்ஏசி தலைவரும், டிடிடி அறக்கட்டளையின் சிறப்பு அழைப்பாளருமான சேகர் ரெட்டி, இந்தாண்டு இறுதிக்குள் சென்னையில் வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவதற்கான இடத்தை இறுதி செய்ய தமிழக அரசுடன் கோயில் அமைப்பு ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்.

கோவில் கட்டும் இடம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட இடம் ஒதுக்குவதாக தெரிவித்தார். ஆனால், அவர் மறைந்த பிறகு, சென்னையில் கோவில் கட்ட இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கோவில் கட்டுவதற்கான இடம் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார் சேகர் ரெட்டி.












Click it and Unblock the Notifications