பொன்னியின் செல்வன்.. டைமிங்கில் அசத்தல் முடிவு எடுத்த சுற்றுலாத் துறை.. 3 நாள் டூருக்கு ஏற்பாடு
சென்னை: 'பொன்னியின் செல்வன்' என்று பெயரில் ராஜராஜ சோழனின் வரலாறு இடம்பெற்ற இடங்களை காண தமிழக சுற்றுலாத்துறை சார்பாக சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்கியின் எழுத்தில் வெளியான பொன்னியின் செல்வன், இப்போது திரையில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. அதுமட்டுமல்லாமல் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் என தமிழ் சினிமாவின் நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய பொன்னி நதி பாக்கனுமே என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதனால் பொன்னி நதி பார்க்கும் ஆசையும், பொன்னியின் செல்வன் மற்றும் வந்தியத்தேவன் குறித்த விவாதமும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது.

பொன்னியின் செல்வன்
இந்த விவாதம் ஓரிரு நாட்களில் நிற்கவில்லை. நாளும், பொழுதும் தொடர்ந்து பொன்னியின் செல்வன் குறித்த விவாதங்களும், எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களும் பேசப்பட்டு வருகின்றன. இதனிடையே பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய நாயகனான வந்தியத்தேவன் பயணித்த பாதைகள் குறித்த ஆய்வுகள் குறித்து மீண்டும் பேசப்பட்டது.

3 நாள் சுற்றுலா
இப்படி பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சு அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் தொடர்புடைய இடங்களுக்கு மக்களை சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை டூ தஞ்சை
ஃபிளை ஹாலிடேஸ் என்ற தனியார் அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. 2 இரவுகள், 3 நாட்கள் என சென்னையில் தொடங்கும் பொன்னியின் செல்வன் சுற்றுலா பயணம், மகாபலிபுரம், வீரநாராயணபுரம், கும்பகோணம், பட்டீஸ்வரம், திருவையாறு, நாகை ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் சென்னை திரும்பவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ராஜராஜ சோழனின் வரலாறு இடம்பெற்ற இடங்களுக்கு மக்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

தமிழக சுற்றுலாத் துறை
இந்த சுற்றுலா பயணத்திற்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு சுற்றுலா துறையின் இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். பொன்னியின் செல்வன் படம் வெளியாகும் தருவாயில், பொன்னியின் செல்வன் என்ற பெயரில் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications