வீலிங் செய்தபோது விபத்து.. ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு! டிடிஎஃப் வாசன் அதிரடி கைது
சென்னை: சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் வீலிங் செய்தபோது விபத்து ஏற்பட்ட நிலையில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் கோவையை சேர்ந்தவர். இவர் விலையுயர்ந்த பைக்குளில் நீண்ட தூரத்திற்கு சென்று சாகசங்களை செய்து அதை வீடியோவாக தனது Twin throttlers எனும் யூடியூப் சேனலில் பதிவு செய்வார்.

அவருடைய சேனலுக்கு 2கே கிட்ஸ்கள் அதிகம் பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் டிடிஎஃப் வாசன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சுசுகி ஹயபுஸா பைக்கில் சாகசம் செய்த போது அவர் விபத்தில் சிக்கிவிட்டார். அதிவேகமாக செல்ல முயன்ற போது அவர் வீலிங் செய்ய முயன்றார். அப்போது பைக் நிலைத்தடுமாறி இரண்டு முறை தலைக்குப்புற சுற்றி பள்ளத்தில் விழுந்தது. இதில் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த நிலையில் அதில் அவர் வீலிங் செய்த போது நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதனால் அவருடைய வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்தபடியே தூரத்தில் போய் விழுந்தது. வாசனும் ஒரு தடுப்பு சுவரை தாண்டி தூக்கிவீசப்பட்ட காட்சிகளும் வாகன ஓட்டிகள் ஓடி சென்று அவரை மீட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் வாசன் வீலிங் செய்த போது அவ்வழியாக நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை வாசனின் விபத்து அவர்களது வாகனத்திலும் இடித்து அதில் பயணித்தவர்களுக்கு உயிர் சேதத்தையோ காயங்களையோ ஏற்படுத்தியிருந்தால் என்ன செய்வது என பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸாரும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதுவும் வாசன் ஜாமீனில் கூட வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்துக்கு தமிழக காவல் துறை பரிந்துரை செய்துள்ள நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications