அமமுகவுக்கு 7 தொகுதிகள்.. ராஜ்ய சபா சீட்டுக்கு அடம்பிடித்த டிடிவி தினகரன்.. அமித்ஷா கொடுத்த வாக்கு!
சென்னை: என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 7 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டிடிவி தினகரன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்த சூழலில், தொகுதிகள் குறைந்தாலும் ராஜ்ய சீட் கொடுங்கள் என்று அடம்பிடித்திருக்கிறார். இறுதியாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாசிட்டிவ் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் சூழலில், டிடிவி தினகரனின் அமமுக என்டிஏ கூட்டணியில் இணைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் என்டிஏ பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று டிடிவி தினகரன் அழைக்க, அந்தப் பக்கம் எடப்பாடி பழனிசாமி சகோதரர் என்று டிடிவி தினகரன் அழைக்க என்று தங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை தான் என்று பேசினார்கள்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இதன் மூலமாக தென் மாவட்டங்களில் அமமுக மூலமாக அதிமுகவுக்கு ஒரு பூஸ்ட் கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்கக்கூடும்.
ஆனால் அமமுகவுக்கு குறைந்த அளவிலேயே தொகுதிகள் ஒதுக்கீடு என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாஜகவுக்கு மொத்தமாக தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, அதன்பின் உள் ஒதுக்கீடாக பாஜக மூலமாக பிரித்து கொடுக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே டிடிவி தினகரன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.
இந்த நிலையில் கூட்டணியின் போதே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அமமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார். ஆனால் அமித்ஷா நேரடியாகவே ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் இருக்கும் என்பதை கறாராக சொல்லி இருக்கிறார்.
இதன்பின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த போது டிடிவி தினகரன் தரப்பில், தொகுதிகள் குறைந்தாலும், ஒரு ராஜ்ய சபா சீட் கொடுங்கள் என்று நேரடியாக அடம்பிடித்திருக்கிறார். இறுதியாக பியூஷ் கோயல் பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த பின்னரே, டிடிவி தினகரன் கூட்டணிக்கு ஒப்புதல் கூறி நேரில் வந்து சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலமாக டிடிவி தினகரன் ராஜ்ய சபா எம்பி-யாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆண்டிபட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவது சந்தேகம் என்றும் அமமுகவினரே பேசத் தொடங்கி இருக்கின்றனர். டிடிவி தினகரனுக்கு பதிலாக அவரின் மனைவியை களமிறக்க கூடும் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications