‛‛சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன்..’’ ஆ ராசாவுக்கு நாவடக்கம் தேவை.. டிடிவி தினகரன் கடும் சாடல்
சென்னை: ‛‛இந்து மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக திமுகவின் துணைப்பொதுச்செயலார் ஆ ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆ ராசாவுக்கு நாவடக்கம் தேவை'' என அம்மா மக்கள் முன்னேற்ற கழககத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ ராசா. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும், நீலகிரி தொகுதி எம்பியாகவும் உள்ளார்.
இவரது மேடை பேச்சுக்கள் அடிக்கடி விவாதப்பொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தும். இந்நிலையில் தான் சமீபத்தில் ஆ ராசா பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆ ராசா பேசியது என்ன?
இந்த வீடியோவில் பேசும் ஆ ராசா, ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என கூறி இருந்தார்.

போலீசில் புகார்
இதற்கு பாஜகவினர், இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆ ராசாவை கைது செய்ய வேண்டும் எனக்கூறி தமிழகத்தில் பல இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவரை கண்டித்து சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சி தலைவர்கள் ஆ ராசாவின் பேச்சை கண்டித்துள்ளனர்.

டிடிவி தினகரன் விமர்சனம்
பாஜக தலைவர்கள், அதிமுக தலைவர்கள் ஆ ராசாவின் பேச்சை விமர்சனம் செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2 பதிவுகள் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‛‛இந்து மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக திமுகவின் துணைப்பொதுச்செயலார் ஆ ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது'' என தெரிவித்துள்ளார்.

நாவடக்கம் தேவை
மேலும், ‛‛மத உணர்வுகளை தூண்டும் இத்தகைய பேச்சகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. திமுக அரசின் தோல்விகளை திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ? என்ற சந்தகம் ஏற்பட்டிருக்கிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications